(அஸ்லம் எஸ்.மௌலானா)
இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவின் முதல்நாள் காலை அமர்வு நேற்று சனிக்கிழமை (26) கல்முனை நகரில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதன்போது முதல் நிகழ்வாக பேராசிரியர் ம.மு.உவைஸ் அரங்கில் மூத்த இலக்கியவாதி செய்யித் ஹசன் மௌலானா முன்னிலையில், பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் ‘இஸ்லாமிய இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் தொனிப்பொருளில் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கவிக்குயில் மீரா உம்மா அரங்கில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி மைமூனா அஹமட் முன்னிலையில், கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் றூபி வலன்ரீனா பிரான்சிஸ் தலைமையில் ‘முஸ்லிம் இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்’ எனும் தலைப்பில் ஆய்வுரைகள் இடம்பெற்றன.
இவ்விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள், உலமாக்கள், இலக்கிய படைப்பாளிகள் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இலக்கிய பேராளர்கள் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத், உயர் பீடச் செயலாளர் மன்சூர் ஏ.காதர், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உலமாக் கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.
இன்று ஞாயிறு இரண்டாம் நாள் நிகழ்வுகள் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் இடம்பெறுகின்றன.








