கணவனை கத்தியால் குத்திய மனைவிக்கு மரண தண்டனை

Written By avathani Media Network on Tuesday, June 7, 2016


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் கணவனை கத்தியால் குத்திகொலை செய்ததாக இனங்காணப்பட்ட மனைவினான குற்றவாளிக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2003.09.10 ஆம் திகதியன்று கணவனை கத்தியால் குத்திக்கொலை செய்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் இவர் மீது பொலிஸாரினால் கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.

இவ்வழக்கு மேலதிக விசாரணைக்காக கல்முனை மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு சந்தேக நபர் மீது சட்ட மா அதிபரினால் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு விசாரணை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்ட்ட போது குற்றவாளியாக இனம் காணப்பட்ட இறந்தவரின் மனைவியான மாளிகைக்காட்டைச் சேர்ந்த கலந்தர் ரூபியா (வயது-40) என்பவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் மாளிகைக்காட்டைச் சேர்ந்த சின்னலெப்பை அலாவுதீன் (வயது-45) இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பவராவார்.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிவரும் எம். இளஞ்செழியன் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபாதியாக கடமையாற்றி வந்த காலப்பகுதியில் இவ்வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இவ் வேளையில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். 

இந்நிலையிலேயே நீதிபதி எம். இளஞ்செழியன் முன்னிலையில் திங்கட்கிழமை இவ்வழக்கின் குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.