(ஜுனைட்.எம்.பஹ்த்)
திருமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் கடந்த 2016.04.03 ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 8.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காத்தான்குடி-02, சரீப் புரக்டர் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜெயினுலாப்தீன் முஹம்மது சாதிக் (வயது-31) என்பவர் மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதினால் உயிரிழந்தார்.
இவ்விபத்துச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர், வீதி அபிவிருத்தி அதிகார சபை மாகாண பணிப்பாளர் ஆகியோரை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு இவ்விபத்து தொடர்பாக சம்மந்தப்பட்ட திருமலை மாவட்ட அதிகாரிகளை ஸ்தலத்திற்கு வருகை தந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கமைவாக 2016.04.07ஆந்திகதி வியாழக்கிழமை (இன்று) விபத்து நடந்த இடத்தினை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மூதூர் வீதி பச்சனூர் சந்திக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் மோகனதாஸ், மூதூர் பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுசில் சில்வா, மூதூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ரனவீர ஆகியோரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வரவழைத்ததோடு, மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் தவனேஸ்வரன் அவர்களை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு மின்சார சபைக்குரிய அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க மூதூர் பிரதேச மின்சார சபையின் பொறியியலாளர் சிவதீபன் அவர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
விபத்து நடைபெறுவதற்கான காரணங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தி இனிமேலும் இதன் பிற்பாடு இவ்விடத்தில் எதுவித விபத்துக்களும் நடைபெறாது பயணிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இவ்வீதியால் பலதரப்பட்ட கனரக வாகங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கெப் வாகனங்கள் என்பன விபத்துக்குள்ளாவதுடன் இதுவரை 8 மனித உயிர்கள் மூதூர் பச்சனூர் சந்தியில் காவு கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விபத்துக்களுக்கு முன் எச்சரிக்கையாக இவ்வீதியில் சாரதிகளோ, பொதுமக்களோ பின்பற்றக்கூடிய வகையில் பாதுகாப்பு எச்சரிக்கை பதாதைகளோ, வாகனத்தின் வேகங்களை கட்டுப்படுத்துவதற்குரிய வேகக்கட்டுப்பாடுகளோ எதுவுமின்றி இவ்வீதி காணப்படுவதயே காரணம் என மாகாண சபை உறுப்பினர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.
மேலும் இவ்வீதி விபத்து நடைபெறுவதற்கான மிக முக்கிய காரணமாக மின்சார சபையினால் முறையற்ற வகையில் அவ்வீதியில் நடப்பட்டுள்ள மின் கம்பமாகும் இவ்வீதியில் விபத்துக்குள்ளாகும் நபர்கள் மின்கம்பத்தில் மோதுண்டே உயிர் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது.
இவ்வீதியால் வருகை தந்த பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இவ்விடயம் சம்மந்தமாக மாகாண சபை உறுப்பினரிடம் தங்களுக்கு இவ்வீதியினால் சிரமமின்றி பயணிப்பதற்கு வழிவகைகளை மேற்கொண்டு தருமாறும் இவ்வீதியில் அதிகளவாக வெளி மாவட்டங்களிலிருந்து பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுவதோடு, உயிர்களும் பறி போகின்றன என மாகாண சபை உறுப்பினரிடம் தெரியப்படுத்தினர்.
இவ்விடயங்களை கருத்திற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அங்கு வரவழைக்கப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு பொதுமக்களின் விடயங்களை தெளிவுபடுத்தியதோடு மூதூர் வீதி பச்சனூர் சந்தியில் கடைசியாக பறிபோன உயிராக ஜெயினுலாப்தீன் முஹம்மது சாதிக் உயிராகவே இருக்க வேண்டுமெனவும் இனி வருங்காலங்களில் விபத்துக்கள் நடைபெறா வன்னம் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
அரசியல்வாதிகள் என்பவர்கள் மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களின் இல்லம் சென்று அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து சேவையாற்ற வேண்டியவர்கள் பொதுமக்களுக்கு ஓர் அநீதி என்றால் அரசியல்வாதிகள் சம்மந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு மக்களின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் இருந்தபோதும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கப்பால் சென்று மனித நேயத்துடன் தனது சேவைகளை வழங்கி வரும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் எம்நாட்டின் அரசியல்வாதிகளுக்கோர் எடுத்துக்காட்டாகும்.
மட்டு மாவட்டத்தில் இன, மத பேதமின்றி சேவையாற்றும் ஷிப்லி பாறுக் தனது அதிகார மாவட்டத்தையும் தாண்டி பொதுமக்களுக்கோர் பிரச்சினை என்ற போது இன்று தன் சகோதரர்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைமை என கூறலாம்.
