மட்டு ஏறாவூரில் -கிழக்கு மாகாண பாரிய கைத்தொழில் பேட்டை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு-படங்கள்

Written By avathani Media Network on Saturday, April 2, 2016


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு ஆடைத் தொழிற்சாலை ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஏப்ரல் 01ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.


கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உட்பட பல உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

சுமார் ஐயாயிரம் குடும்பங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரத்தை வழங்கக் கூடிய வகையில் இத்தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்று ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.


வறுமை ஒழிப்புக்காக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ளும் கனவை நனவாக்கும் நோக்குடன் ஏறாவூரில் 6 தொழிற்சாலைகள் திட்டம் அமுலாகிறது. இதனடிப்படையில் முதற்கட்டமாக ஒரு ஆடைத் தொழிற்சாலையும், ஒரு கைத்தறித் தொழிற்சாலையும் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டடது.


இதன் மூலம் ஏறாவூரில் நேரடியாக தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களும், மறைமுகமாக மூவினங்களையும் சேர்ந்த 3000 குடும்பங்களும் வேலை வாய்ப்பைப் பெறவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.