'மக்கள் மீது அதிகரித்த வரி; பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரித்த கொடுப்பனவுகள். இது நல்லாட்சியின் பண்பல்ல' -பொறியிலாளர் அப்துர் ரஹ்மான்

Written By avathani Media Network on Thursday, March 17, 2016

(NFGG ஊடகப் பிரிவு)
'மக்கள் மீதான வரிச்சுமை அதிகரித்துச் செல்லும் நிலையில் பாராளுமன்ற மன்ற உறுப்பினர்கள் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரித்துக் கொள்வதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது நல்லாட்சியின் அடிப்படைக்கே விரோதமானதாகும். 

அரசியல் வாதிகளை போஷிக்கின்ற நடவடிக்கைகளை கைவிட்டு. வாழ்கையை செலவு சுமைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கபட்ட வேண்டும்.'' என நல்லாடசிக்கான தேசிய முன்னணியின் NFGG தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 15.03.2016 அன்று காத்தான்குடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியைகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்காக NFGG யினால் வழங்கப்படும் இடைக்காலத் தீர்வுகள் பற்றி அறிவிப்பதற்கான கூட்டம் ஒன்று  காத்தான்குடி NFGGயின் பிராந்தியக் காரியாலயத்தில் இடம் பெற்றது.

முன்பள்ளி ஆசிரியைகள் அதன் நிர்வாகிகள் மற்றும் NFGGயின் சிரேஸ்ட உறுப்பினர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது:

'இந்நாட்டில் நம்பிக்கை தரக்கூடிய ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 15 மாதங்கள் கடந்திருக்கின்றன. நாட்டில் நிலவிய ஊழல் மோசடி மற்றும் வீண்விரயங்களுக்கு முடிவு கட்டி நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்து மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்து அதன் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது இந்த ஆட்சி மாற்றத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

ஆட்சி மாற்றத்தின் ஆரம்பக் கட்டங்களில் மக்களின் வாழ்க்கை செலவை குறைக்கும் சில நம்பிக்கை தரக்கூடிய பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இப்போது அந்த நம்பிக்கையை மக்கள் படிப்படியாக இழக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சமாளிக்க முடியாத கடன் சுமையில் இந்த நாடு மூழ்கியிருப்பதன் காரணமாகவே திட்டமிட்டபடி பொருளாதார நன்மைகளை மக்களுக்கு வழங்க முடியாதிருக்கிறது என அரசாங்கம் தற்போது சொல்கிறது.

இந்த நாடு கொண்டிருக்கும் கடன் சுமையின் பாரதூரம் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றேயாகும். 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற போது இரண்டரை இலட்சம் கோடியாக இருந்த நாட்டின் கடன் சுமை மஹிந்தவின் 10 வருட ஆட்சிக்காலத்தில் நான்கு மடங்காக அதிகரித்து இப்போது அது பத்து இலட்சம் கோடியாக மாறியிருக்கிறது. இந்த கடன் தொகையானது  நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 75 % ஆகும். இன்னொரு வகையில் சொன்னால் நமது மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கிட்டத்தட்ட நான்கரை இலட்ச ரூபா கடன்சுமை இருக்கிறது. இந்நிலையில் நாட்டின் நன்மைக்காக பொருளாதாரக் கஸ்டங்களை மக்கள் இன்னும் சில காலங்களுக்கு சகித்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறப்படுகிறது.

ஆனால், அவ்வாறு அறிவுரை கூறும் மக்கள் பிரதிநிதிகள் நாட்டின் நன்மைக்காக எவ்வாறான தியாகங்களைச் செய்ய தயாராக இருக்கின்றார்கள் என்பதுதான் இங்கு பாரிய கேள்விகளாகும்.

அந்த வகையில், சில தினங்களுக்க முன்னால் வெளியான செய்தியொன்று பெரும் ஆச்சர்யத்தைத் தருகிறது.  அதாவது கடந்த வாரத்தில் கூடிய பாராளுமன்றக் குழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளையும். கொடுப்பனவுகளையும் பெருமளவில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அலுவலக வாடகை, தொலைபேசிச் செலவுகள் , கொழும்பில் தங்கியிருப்பதற்கான வாடகை மற்றும் பாராளுமன்ற குழுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான அதிகரித்த கொடுப்பனவுகள் என கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ரூபாய் மேலதிக கொடுப்பனவுகளை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பெறுகின்றார்கள்.

ஏற்கனவே அவர்களுக்கு இலட்சக்கணக்கில் வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கும் சலுகைகளுக்கும் மேலதிகமாகவே இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன என்பதனை நாம் மறந்து விடக்கூடாது.

இந்த நடவடிக்கை மக்கள் நலன் சார்ந்த அரசியலுக்கு முற்றிலும் விரோதமானதாகும். ஏனெனில் நாட்டு மக்கள் மீது வரிச்சுமைகளை மேலும் மேலும் அதிகரித்துவிட்டு அதே மக்களின் வரிப்பணத்தில் தமது கொடுப்பனவுகளை அதிகரித்துக் கொள்வதென்பது மக்களைச் சுரண்டுகின்ற ஒரு நடவடிக்கையாகும். இது நல்லாட்சி அடிப்படைப் பண்புகளுக்கு விரோதமானதாகும். கடந்த அரசாங்கத்தை போலல்லாது இந்த அரசாங்கம் அரசியல் வாதிகளை போஷிக்கின்ற நடவடிக்கைகளை கைவிட்டு மக்களை அவர்களின் நாளாந்தத் கஷ்டங்களிலிருந்தும் வாழ்கையை செலவு சுமைகளிலிருந்தும் மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.'
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.