வானத்திற்கு கஞ்சா மயக்கம்

Written By avathani Media Network on Tuesday, March 15, 2016






(எம்.எல்.எம்.அன்ஸார்)





திடீரென 


மழைக்கு நிகழ்ந்த 

மரணத்தைத் தொடர்ந்து 

வெயிலின் பராமரிப்பில் 

அவதிப்பட வேண்டியதாயிற்று

அழகிய பூ!

*

வளர 

பூ நுழைந்த புதிய தோட்டத்தில் 

தென்றலை வரவிடாமல் 

கம்பி வேலி போட்டு 

காவல் புரிந்தது வெயில்!

*

காற்றோடு விளையாட விடாமல் 

பூவை 

கட்டிப்போட்டு வைக்க 

சூரியன் கட்டளை இட்டிருந்தது!

*

மழையிடம் பால் குடித்து 

மகிழ்ச்சியாக வளர்ந்து கொண்டிருந்த 

பூவை 

சூரியன் திட்டமிட்டு 

அனாதையாக்கியதாக 

சந்தேகம் இருக்கிறது மேகங்களுக்கு!

*

பூவை 

பாரம் எடுத்திருந்த 

படுபாதக வெயில் 

மணக்கக் கூடாதென்ற 

மரண எச்சரிக்கையோடு 

பூவுக்கு 

சூடு வைத்து சுகம் கண்டதை 

சூரியன் பார்த்து ரசித்த போது 

வானம் கண்டு கொள்ளாமல் 

கஞ்சா மயக்கத்தில் இருந்திருக்க வேண்டும்!

*

நல்ல வேளையாக 

இன்று பகல் எதிர்பாராமல் வந்த 

கருமேகக் கூட்டங்கள் 

விசாரணை ஏதும் செய்யாமல் 

சூரியனையும் வெயிலையும் 

கைது செய்து கொண்டு போக 

நிழல் 

வாடிய பூவுக்கு 

மருத்துவ சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறது!

*

மழையின் மடி கிடைக்காதவரை 

பூவுக்கு 

நிழலின் தாலாட்டு 

நிலையானது அல்ல!

14-03-2016










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.