றக்பி வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் ராஜபக் ஷவை கைது செய்வார்கள். அதன் பின்னர் கோத்தபய ராஜபக் ஷவை கைதுசெய்வார்கள். பின்னர் பசில் ராஜபக் ஷவை கைது செய்வார்கள். இறுதியாக என்னையும் கைதுசெய்து பழிதீர்த்துக்கொள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று கண்டி தலதாமாளிகை யில் வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். வழிபாடுகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது றக்பி வீரர் தாஜு தீன் மரணம் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள் தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், றகர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் எனது குடும்பம் கைதுசெய்யப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் பத்திரிகைகள் தெரிவிகின்றன. அதேபோல் கடந்த ஆட்சியில் உயர்மட்ட அதிகாரிகளுடன் அரச அதிகாரிகள் தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் அவர்களை பதவி நீக்கும் நடவடிக்கையும் கைதுசெய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் இப்போது ரகர் வீரர் தாஜுதீன் மரணத்தில் எனது மகன் நாமல் ராஜபக் ஷ தொடர்புபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக் ஷவை கைதுசெய்யப் போவதாகவும் எனது மனைவி ஷிரந்தி ராஜபக் ஷவை கைதுசெய்யப்போவதாகவும் கூறுகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை. நாம் இந்த நாட்டில் உண்மையாகவும் நேர்மையாகவும் ஆட்சி நடத்தி சென்றுள்ளோம். எனினும் இவர்கள் எம்மீது உள்ள தனிப்பட்ட கோபத்தை தீர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பழிதீர்க்க பார்க்கின்றனர்.
ஆகவே இப்போது ரகர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் நாமல் ராஜபக் ஷவை கைது செய்வார்கள். அதன் பின்னர் கோத்தாபய ராஜபக் ஷவை கைதுசெய்வார்கள். பின்னர் பசில் ராஜபக் ஷவை கைதுசெய்வார்கள். இறுதியில் என்னை கைதுசெய்து தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வார்கள் என்றார்.

