(NFGG ஊடகப்பிரிவு)
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விசேடமாக, ஒவ்வொரு துறைகளிலும் மாவட்ட மட்டங்களில் முதலிடங்களைப் பெற்ற, அதேபோன்று ஏனைய சிறப்பு சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கு விசேடமாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையம் தெரிவிக்கின்றேன்.
காத்தான்குடி, ஆரையம்பதி, ஓட்டமாவடி மற்றும் மட்டக்களப்பு நகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதல்தர சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். அதுபோலவே திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் உயிரியல் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இது போன்று சாதனைக்குரிய வெற்றிகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் என்னுடைய விசேட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்மாணவர்களின் வெற்றிக்காக பின்னணியில் நின்று உழைத்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் எனது மனமாந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெவ்வேறு துறைகளில் பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் இம்மாணவர்கள் பல்கலைக் கழக பட்டப்படிப்பிலும் சாதனைகள் படைக்க வேண்டும் என பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
அதுபோலவே இவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தத்தமது துறைகளில் உயர்படிப்புக்களை மேற்கொண்டு துறைசார் நிபுணர்களாக நமது மக்களுக்கும் நாட்டிற்கும் இந்த உலகத்திற்கும் சேவையாற்றக் கூடியவர்களாக உருவாக வேண்டும்.
கடந்த முறை பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்களில் கனிசமானவர்கள் பல்கலைக் கழக அனுதிக்குப் போதுமான சித்திகளைப் பெற்றிருக்காமல் இருக்கலாம். அவ்வாறான மாணவர்கள் இதனைத் தோல்வியாகக் கருதாமல் எதிர்கால வெற்றிக்கான முதற்படியாக இந்தப் பரீட்சைப் பெறுபேறுகளைக் கருதி தொடர்ந்தும் முயற்சிக்க வேண்டும். கடந்த காலங்களில் பரீட்சைக்கு தயார் செய்கின்ற போது தாம் எந்த இடத்தில் தவறு விட்டோம் என்பதை அடையாளம் கண்டு அதற்கேற்ற வகையில் முறையான தயாரிப்புக்களை மேற்கொண்டு அடுத்தடுத்த பரீட்சைகளில் முயற்சி செய்து பல்கலைக் கழக அனுமதியினைப் பெறவேண்டும்.
இம்மாணவர்கள் அனைவரினதும் எதிர்கால இலட்சியங்கள் சமூகத்தின் எதிர்பார்ப்புகளும் நிறைவேறும் வகையில் அவர்களின் பல்கலைக்கழக பட்டப்படிப்பும் , ஏனைய எதிர்கால முயற்சிகளும்அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

