(NFGG ஊடகப்பிரிவு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச அப்பியாசக்கொப்பி நிகழ்வுகள் கடந்த எட்டு தினங்களாக மிக வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் இந்நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு 01.01.17 ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி ஹிஸ்புள்ளாஹ் கலாச்சார மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
NFGGயின் காத்தான்குடி பிராந்திய ஆலோசனை சபையின் செயலாளர் MACM ஜவாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். காத்தான்குடி ஜம்மிய்யதுல் உலமாசபைத் தலைவர் அல்ஹாஜ் மௌலவி கையூம் ஷர்கி அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், பொதுச்செயலாளர் நஜா முஹம்மட், தேசிய அமைப்பாளர் MBM. பிர்தௌஸ் நளீமி , மகளிர் அணி செயலாளர் பஹ்மியா ஷரீப் உட்பட பலரும் இங்கு சிறப்புரைகளை ஆற்றினர்.
இவ்விலவச அப்பியாசக்கொப்பி விநியோகமானது, கடந்த 26.12.16 அன்று NFGG யினால் அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காத்தான்குடி,பூனொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் , கர்பலா உட்பட பல இடங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, தோப்பூர், கந்தளாய் உட்பட பல பகுதிகளிலும் இலவச அப்பியாச கொப்பி விநியோக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் முஸ்லிம் மாணவர்கள் உள்ளடங்கலாக சுமார் 18000 மாணவர்கள் பயன்பெறத்தக்க வகையில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் குறித்த பிரதான நிகழ்வில் மாத்திரம் சுமார் 800 மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.
ஊர்ப்பிரமுகர்கள், NFGGயின் சிரேஷ்ட ஆலோசனை சபை உறுப்பினர்கள் மகளிர் அணி உறுப்பினர்கள் பெற்றோர்கள் தமிழ் முஸ்லிம் மாணவர்கள் உட்பட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



























