கல்முனையில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் பட்டதாரிகளுக்கான விசேட கருத்தரங்கு

Written By avathani Media Network on Friday, January 27, 2017

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் அமைப்பான “அட்சோ” (ADSSO) நிறுவனம் கல்முனைத் தொகுதியில் வசிக்கும் வேலைவாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகளின் விபரங்களைச் சேகரித்து ஆவணம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது.

இது தொடர்பான முதலாவது கருத்தரங்கு எதிர்வரும் 28 ஆம் திகதி கல்முனைத் தொகுதியில் நடைபெறும். வெகு விரைவில் ஏனைய தொகுதிகளில் நடத்தப்படுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தகவல்கள் உரிய முறையில் ஆவணப்படுத்தப்பட்டு, பிரதமர், அமைச்சர்கள் பலரிடமும் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரிடமும் கையளிக்க “அட்சோ” அமைப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

எதிர்காலத்தில் அரசாங்கம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ள வேலை வாய்ப்புகளில் எமது மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகளையும் உள்வாங்குவதற்குரிய அழுத்தங்களை உரிய முறையில் வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக அமைப்பின் செயலாளர் எம்.பி.எம். றின்ஸான் எமக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட கருத்தரங்கு எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9மணிக்கு சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எனவே சந்தர்ப்பத்தைத் தவறவிடாது மேற்படி கருத்தரங்கில் கல்முனைத் தொகுதியைச் சேர்ந்த இதுவரை வேலைவாய்பற்றிருக்கும் சகல உள்வாரி, வெளிவாரி பட்டதாரிகளும் உரிய நேரத்துக்கு தவறாது சமூகமளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.