கல்முனை அபிவிருத்தி திட்டங்களை இவ்வருடம் தொடர்ந்தும் முன்னெடுக்க அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை!

Written By avathani Media Network on Monday, January 23, 2017

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சடடமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பரினால் முன்மொழியப்பட்டு, நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கல்முனை மாநகர சபையினால் கடந்த வருடம் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களை இவ்வருடம் தொடர்ந்தும் முன்னெடுத்து, பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உயர்மட்ட கூட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் ஜவாத், அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ.முஹைனுதீன், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி உட்பட அமைச்சினதும் காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினதும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனையில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் யாவும் கடந்த வருடம் பிற்பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டதனால், இவ்வருடமும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை விடுவித்து, அவ்வேலைத் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து, நிறைவு செய்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் கல்முனை பொதுச் சந்தை அபிவிருத்தி, கல்முனை ஏ.ஆர்.மன்சூர் பொது நூலக அபிவிருத்தி, கல்முனை சந்தாங்க்கேணி விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கின் இரண்டாம் கடட நிர்மாணப் பணி, மருதமுனை பொது நூலக கேட்போர் கூடம், நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதான அபிவிருத்தி, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை மற்றும் இஸ்லாமாபாத் பிரதேசங்களில் சமூக வைத்திய நிலையங்களின் நிர்மாணப் பணிகள் மொத்தமாக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இவை தவிர 162 மில்லியன் ரூபா செலவில் சாய்ந்தமருது தோணா அணைக்கட்டு நிர்மாணம், புதிய நகர திட்டத்திற்காக சாய்ந்தமருது கரைவாகு காணியை மண்ணிட்டு நிரப்பும் வேலைத் திட்டம் என்பனவற்றையும் இவ்வருடத்தில் துரிதமாக முன்னெடுத்து, நிறைவு செய்வதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.