கல்வெட்டு உடைப்பு; ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு பெப்.16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Written By avathani Media Network on Tuesday, January 24, 2017

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை நகரில் நிறுவப்பட்டிருந்த எம்.எஸ்.காரியப்பர் வீதிக்கான பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இடித்து நொறுக்கிய குற்றச்சாட்டில் டெலோ கட்சியின் உப தலைவரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்றி மகேந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் ஐ.பயாஸ் ரஸ்ஸாக் மேற்படி தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தார். 

கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் ஐக்கிய சதுக்க சந்தியில் இருந்து சந்தாங்கேணி விளையாட்டு மைதான நுழைவாயிலைத் தொட்டு, பொதுச் சந்தை வரையான பாதைக்கு கல்முனை மாநகர சபையினால் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் சூட்டப்பட்டு, கடந்த 2015.08.09 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமத் ஆகியோரினால் அதனை திரை நீக்கம் செய்து, வீதியை திறந்து வைப்பதற்காக கல்முனை மாநகர சபையினால் கல்வெட்டு ஒன்று நிறுவப்பட்டது.

அதேவேளை இப்பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் காலை டெலோ அமைப்பின் உப தலைவரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்றி மகேந்திரன் தலைமையில் அவ்விடத்திற்கு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று வருகை தந்ததுடன் அவரினால் அந்த கல்வெட்டு அடித்து நொறுக்கப்பட்டதாக கல்முனை மாநகர முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக்கினால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட முறைப்பாட்டையடுத்து ஹென்றி மகேந்திரன் கைது செய்யப்பட்டு, 75000 ரூபாவுடன் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கின் முதலாவது விசாரணையே இன்று இடம்பெற்றது. பிரதிவாதி ஹென்றி மகேந்திரன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா ஆஜராகியிருந்தார்.









Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.