அல் - குர்ஆனின் போதனைக்கேற்ப முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்ற ஞானசார தேரரின் கூற்று கண்டிக்கப்பட வேண்டியது -

Written By avathani Media Network on Friday, December 30, 2016

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அல் - குர்ஆனின் போதனைக்கு ஏற்பவே முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துகின்றனர் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய கூற்றாகும் என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

இவர் மேலும் இது பற்றித் தெரிவித்திருப்பதாவது,

அவர் வேண்டுமென்றே இஸ்லாத்தின் மீது சேறு பூசுவதற்காகவேண்டி அறிக்கைகளை விடுவது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை திருப்பிக் கூறுவதற்கு இந்த பௌத்த பிக்கு மிகவும் தந்ரூபாயத்தை இப்போது கையாண்டு வருவதின் மூலமாக நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மீது பெரும்பான்மையினர் வெறுப்புக் கொள்வதற்கு வழி சமைக்கின்றார். பாராளுமன்றத்தில் அமராமல் இப்போது வெளியில் உள்ள ஒருவர் என்ற வகையில் சகோதரர் ஹிஸ்புல்லாஹுடைய பாராளுமன்ற உரை தற்காலத்துக்கு மிகவும் பயன்படத் தக்கதாக அமைந்திருப்பதை நாம் உணரமுடிகின்றது. அவர் கூறிய உண்மையாண கருத்து என்னவென்றால், அன்று தமிழ் இளைஞர்கள் தம் மக்களுடைய குறைகளை அன்றைய தமிழரசுக் கட்சிக்கு எடுத்துக் கூறினர். எனினும் அன்றைய தலைமை அதனை சற்றும் மதிக்கவில்லை. எனவேதான் ஆத்திரம் கொண்டெழுந்த தமிழ் சகோதர இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி முதன் முதலாக தம் இனத்தின் தலைவர்களையே கொலை செய்யும் அளவுக்கு அவர்களுடைய உணர்வுகள் கட்டுக்கடங்காமல் போய்விட்டன.

இதனையே உதாரணத்துக்கு எடுத்துக் கொண்ட சகோதரர் ஹிஸ்புல்லாஹ், அந்த தமிழ் இளைஞர்களுடைய போக்கின்படி இந்த அரசாங்கத்துக்கு ஒரு சமிக்ஞை விடுத்தார். இப்போது இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன விரோத சக்திகளுடைய நடவடிக்கைகளை அரசாங்க தலைமைத்துவதற்கு கொண்டு வருகின்றோம் ஏனெனில், நாம் இப்போது கூறுவதை நீங்கள் செவி சாய்க்காவிட்டால், அன்று தமிழ் வாலிபர்கள் எப்படி ஆயுதம் ஏந்தினார்களோ அதேபோன்றுதான் இன்று முஸ்லிம் வாலிபர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற எச்சரிக்கையைத்தான் அவர் விடுத்தாரே ஒழிய, அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவோ, ஜிகாத் போராட்டம் ஆரம்பிக்க வேண்டும் என்ற அர்த்தத்திலோ அவர் சொல்லவில்லை. சகோதரர் ஹிஸ்புல்லாஹ் கூறிய தாபரியத்தை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்துள்ளனர். ஜிகாத் என்பது ஒரு வரையறைக்கு உட்பட்டது. கண்டவர்களையெல்லாம் கொல்லுமாறு ஜிகாத் நடைமுறைப்படுத்த முடியாது. முஸ்லிம் சமுதாயத்தை வேரோரு அறுப்பதற்கு எந்த சக்தியாவது முனைந்தால், அதற்கு விரோதமாக முஸ்லிம்கள் போராடுவது கடமையாகும். இதனையே குர்ஆன் வலியுறுத்தி இருக்கின்றது. இதுவல்லாமல் மேற்கத்திய வல்லரசுகளுடைய சூழ்ச்சியின் காரணமாக வளர்ந்துவிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். போன்றோர்களுடைய கொலை கலாசாரத்தை குர்ஆன் அங்கீகரித்ததுமில்லை. ஜிகாத் வரை விலக்கணத்துக்குள் வருவதுமில்லை.

ஒரு முறை இஸ்லாத்தின் மாவீரர்களுள் ஒருவரான காலித் இப்னு வலீத் யுத்தத்தில் வெற்றி கொண்டு நாடு திரும்பிய போது, மக்கள் கூட்டமாகத் திரண்டு, “நீங்கள் யுத்தத்தில் பெற்ற வெற்றியை நாங்கள் பாராட்டுகின்றோம்” என்று கூறினார்கள். உடனே காலித் இப்னு வலித் பதில் கூறும் போது “யுத்தத்தில் வெற்றி பெறுவது பெரிதல்ல, சமுதாயத்தில் சன்மார்கத்தைக் காப்பாற்றி சமுதாயத்தை உயர்ச்சி பெறச் செய்வதுதான் பெரிய ஜிகாத். அந்த ஜிகாதை நடை முறைப்படுத்தத்தான் நான் இப்போது கிளம்பியிருக்கின்றேன்” என்று கூறினார். இதை உலகத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் சிந்திக்கக் கூடிய ஒரு படிப்பினையாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே முஸ்லிம்கள் மீது, இஸ்லாத்தின் மீது கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் இந்த பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இப்படியாக வார்த்தைகளை பிதற்றி வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நாட்டின் நலனை கருத்திற் கொண்டு நாம் அவருக்கு அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்

அதுமட்டுமல்ல, முஸ்லிம் இன விரோத உரைகளை பேசியும் எழுதியும் வருவதை சற்றும் பொறுப்படுத்தாதவர் என்ற வகையில் நாட்டின் ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் இந்த தேரரை அவரது சமரச பேச்சுவார்தை மேசைக்கு அழைக்கின்றனர் என்றால் இந்த விடயத்தில் உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்பதை முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல, நாட்டின் நலன் விரும்பும் அனைவரும் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். எனவே தொல்பொருள் ஆய்வை நடத்துவதன் மூலம் பெரும்பான்மை இனங்களுடைய இடங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று கூறியவுடனேயே அதற்காக வேண்டி ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்திருக்கிறார். அதேபோன்று சமரச முயற்சிகளை நாடி நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மட்டு. நகர் செல்லும் போதும் இதே பௌத்த மதகுருவை அழைத்துச் செல்கின்றார். இது என்ன விநோதமான செயலா? அல்லது மர்மமான செயலா? என்பதை சமுதாயம் கண்ணைப் பிதற்றிக் கொண்டு இப்போது கேட்க ஆரம்பித்துள்ளனர் --- என்றும் தெரிவித்துள்ளார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.