மு.கா வை முற்றாக அழித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் ஹக்கீம்.

Written By avathani Media Network on Saturday, November 19, 2016

(மு.அ.மு முர்சித்)

"இலங்கை முஸ்லிம்களின் ஏகபோகத் தலைமை நான் ” எனும் நிலையில் தன்னை அடையாளப்படுத்த முனையும் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அதே மக்கள் இலங்கை பேரினவாத அமைப்புகளின் அடாவடி நெருக்கடிகளுக்கு மத்தியில் நிம்மதியாக வாழமுடியாத நிலை வெளிப்படையாக தெரிந்தும் கூட ஒரு இஸ்லாமிய சமூகத்தின் உண்மையான தலமைத்துவத்திற்கு எதுவித அருகதையும் அற்ற நபராகவே தன்னை வெளிப்படுத்திவருகிறார்.

போர்க்காலத்தில் கூட முஸ்லிம் மக்கள் அனுபவித்த இழப்புக்கள், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம்-அவர்களின் மீள்குடியேற்றம், தர்கா நகர்கலவரம் , பள்ளிவாசல்கள் மீதான தொடர் தாக்குதல்கள், சிங்களப் பேரினவாத அமைப்புக்களின் அடாவடி அட்டகாசங்கள், முஸ்லிம்களின் பூர்வீக பகுதிகளில் அத்துமீறிய குடியேற்றங்கள்-சிலை வைப்புக்கள், முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினை, கரையோர மாவட்டக் கோரிக்கை, வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரம், கிழக்கு மக்கள் மீதான தொடர் புறக்கணிப்பு, மர்ஹும் அஸ்ரப் அவர்களின் மரண விசாரணை மீதான பொடுபோக்கு மட்டுமல்லாமல் உட்கட்சிப் பூசல் , ஹராம் கலந்த வாழ்க்கை முறை என 17 வருடங்களாக தொடரும் பெருத்த பட்டியலுடன் தான்தான் முஸ்லிம் மக்களின் ஏகபோக தலமை என்ற பிரம்மையில் வலம் வருவது கேலிக்கூத்து பேலதான் பார்க்க முடியும்.

புனித குர் ஆன் , ஹதீஸ் என்பவற்றை மூலமாகக் கொண்டு நடாத்தப்படும் முஸ்லிம் மக்களின் அரசியல் பேரியக்கம் என்று பசப்பு மற்றும் போலி வார்த்தைகளால் சாதாரண மக்களைக்கூட மடையர்களா வழிநடத்த எத்தணை செய்யும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அவர்களின் போலி முகத்திரை கிழியும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துவருவதை பார்க்கும்போது மு.காவின் ஒட்டு மொத்த அழிவுக்கு மூலகாரணமாக இருக்கப்போவது அமைச்சர் ஹக்கீம் அவர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெட்டத்தெளிவாக அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.

இவற்றுக்கு எடுத்துக்காட்டாக புத்தளம் கே.பாயிசின் வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் அவர்களை செருப்புக்களால் தோரணம் செய்து வரவேற்பு செய்தமை , அதே கூட்டத்தில் ஒரு இஸ்லாமிய தலைவன் என்பதை மறந்து வடிவேலுவை விடவும் கேவலமான முறையில் வெகுளித்தனமாக படிப்பறிவு இல்லாத பாமரனுவிடவும் கீழ்த்தரமாக பேசியமை, வடபுல மக்களின் மனங்களில் என்று அழியாத இடம்பிடித்துள்ள மர்ஹும் நூர்தீன் மசூர் அவர்கள் மீதான வக்கிர வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் சக அமைச்சர் ரிசாட் அவர்களை கீழ்தரமாக அவருடைய மண்ணிலேயே சித்தரிக்க முயற்றமை என்று தொடர் பட்டியலே இடமுடியும்.

எனவேதான் இவ்வாறான கேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் பிரதிபலிப்பே கிழக்கின் எழுச்சியின் தோற்றமும் மு.கா.வின் தலைமைக்கு எதிரான தொடர் அழுத்தங்களும், ஏனைய முஸ்லிம் கட்சிகளின் புத்துயிர்ப்பு மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் மிகைக்கும் வண்ணம் அமைச்சர் ஹக்கீம் மீதான சாதாரண மக்களின் வெறுப்பு மனநிலையையும் காணமுடியும்.

இவற்றின் வெளிப்பாடே அமைச்சர் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் பகுதிகளுக்குள் முன்னைய காலங்களைப் போன்று நடமாடவோ, பொதுக்கூட்டங்களில் பேசவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலைக்கு சிறந்த உதாரணம் மு.கா.வின் அசைக்கமுடியாத கோட்டையாக கருதப்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மையில் அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும்.

அங்கு மேடைக்கு பிரசன்னமாகியிருந்த அனைத்து மு.கா பிரமுகர்களும் பேசும்போது அமைதியாக இருந்த மக்கள் மு.கா.வின் தேசிய தலைவர் என்று கூறிக்கொள்ளும் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் பேசும்போது கூக்குரல் இட்டு அவரின் பேச்சை இடைநிறுத்தச்செய்து ஓடச்செய்தமையும் அதற்கு முன்னர் அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமான கறுப்புக்கொடி மற்றும் போஸ்டர்கள் முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிபிடமுடியும்.

இதனையோட்டியதாக கிழக்கில் மு.காவின் ஆதிக்கம் செறிந்திருந்த பல முக்கிய முஸ்லிம் கிராமங்களில் மு.கா மீதான நம்பிக்கை இன்மை அலையாக வெகுவாக பரவுகிறது. எனவேதான் இச்சந்தர்ப்பத்தை கிழக்கில் மு.கா வுக்கு அடுத்தபடியாக செல்வாக்குப் பெற்றுவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பயன்படுத்துமாக இருந்தால் அடுத்துவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தலை சிறப்பாக முகங்கொள்ள முடிவதோடு கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் அது மாறமுடியும்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.