முஸ்லிம்களது உணர்வுகளைத் தூண்டிவிடும் சதி செய்பவர்கள் யார் அரசு விளக்கமளிக்க வேண்டும் என்கிறார் அஸ்வர்

Written By avathani Media Network on Friday, November 18, 2016

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டிவிட சதி செய்பவர்கள் யார் என்பதனை அரசு உடன் வெளியிட வேண்டுமென முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தபால், தபால் சேவைகள் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் ஊடகங்களுக்கு இது தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாகவே அஸ்வர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது,

முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டிவிட சதி செய்யப்பட்டு வருவதை உளவுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தரப்பட்டுள்ளதாக முஸ்லிம் விவகார தபால் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலிம் ஊடகங்களுக்கு நேற்று (16) கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட சதிகாரர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் அறியவேண்டும். இதற்கான விளக்கத்தை அரசாங்கம் உடன் அளிக்க வேண்டும்.

சில காலமாக சியோனிய - மொஸாத் உளவுப் பிரிவினர் நம் நாட்டில் உலாவி வருவதாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செய்திகள் வெளியாகின. மொஸாத் படையின் அதிகாரி வலைப் பின்னல் நம் நாட்டில் முஸ்லிம்களைக் குறி வைத்துத்தான் நடை பெறுகிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சியோனிச - மொஸாத் பிரிவினர் இஸ்ரவேலின் கைப்பொம்மையாகும். மறைந்த அமைச்சர் காமினி திஸாநாயக்கவே, விக்டர் ஒஸ்டோர்ஸ்கி என்பவர் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ள விபரங்களை அன்று வெளியிட்டார். புலிப்படைக்கும் அரச படைக்கும் ஒரே நேரத்தில் ஒரு மதிலின் இரு புறமிருந்து யுத்த பயிற்சியளிக்கப்பட்ட விபரமும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. முஸ்லிம்கள் உதவி நல்கி வெற்றி பெற்ற இந்த அரசாங்கத்தின் காலத்தில் இந்திய சக்திகள் எமது மண்ணில் அதிகரித்துள்ளது மிகவும் கவலைக்கிடமான விடயமாகும்.

அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ள செய்தியின் அடிப்படையில், சதிகார கும்பலை இனம் காணவும். அபாயம் தலைமேல் செல்லுமுன் அவர்கள் கொட்டத்தை அடக்கவும் நாம் ஜனாதிபதியை வேண்டுகிறோம்
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.