நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் கூற்றுக்கு முஸ்லிம் உலமா கட்சி கண்டனம்.

Written By avathani Media Network on Sunday, November 20, 2016


(ஜுனைட்.எம்.பஹ்த்)

தவ்ஹீத், தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி போன்றவை பயங்கரவாத இயக்கங்கள் 
என்பது போல் பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் கூற்றை முஸ்லிம் உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்ததாவது,
முஸ்லிம் திருமண சட்டத்தில் அரசாங்கம் கை வைப்பதை எதிர்த்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பாரிய ஆர்ப்பாட்டம் செய்ததோடு இனவாதி ஞானசாரவை தைரியமாக சிங்களத்தில் கண்டித்தமையை முஸ்லிம் இயக்கங்கள் என 23 
இயக்கங்கள் ஜமிய்யத்துல் உலமாவின் தலைமையில் ஒன்று சேர்ந்து SLTJ யை கண்டித்து அரசுக்கு தமது விசுவாசத்தை காட்டியிருந்தன.

ஆனால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தவ்ஹீத், தப்லீக்,ஜமாஅத் இஸ்லாமி, சுன்னத் வல் ஜமாஅத் 
என்பனவற்றை பயங்கரவாத இயக்கங்கள் போல் சித்தரித்துள்ளார். இதன் 
மூலம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை அரசு தடை செய்ய வேண்டும் என கனவு
கண்டவர்களையே கதி கலங்க வைத்துள்ளான் இறைவன்.

பொதுவாக மேற்படி இயக்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் என்பதை மஹிந்த காலத்திலேயே தென்னிலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகள் முயற்சி செய்தனர்.

2007ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவருக்கு ஆதரவான 
முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற போது உலமா கட்சி சார்பில் மௌலவி முபாறக் அப்துல் மஜீதும் 
அதன் செயலாளர் மர்ஹூம் பத்ருத்தீன் கஃபூரி மௌலவி அவர்களும் கலந்து 
கொண்டிருந்தனர்.

அதன் போது தவ்ஹீத் ஜமாஅத், தப்லீக், ஷபாப், ஜமாஅதே இஸ்லாமி என்பன 
பயங்கரவாத அமைப்புக்கள் என்றும் அவற்றை தடை செய்ய வேண்டும் எனவும் 
மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தனர்.

மஹிந்தவும் தனது 
செயலாளரை அழைத்து இவர்கள் கூறும் பெயர்களை எழுதி அவற்றை தடை செய்யும்படி கேட்டுக்கொண்டார். செயலாளரும் எழுத தொடங்கினார்.

உடனே உலமா கட்சித்தலைவர் ஜனாதிபதியை நோக்கி இது முஸ்லிம் சமூகத்தின் 
உள் வீட்டு பிரச்சினை. இதில் நீங்கள் தலையிட்டால் முஸ்லிம் சமூகம் உங்கள் மீதுதான் வெறுப்புக்கொள்ளும். ஆகவே இது விடயத்தை நாம் 
பார்த்துக்கிள்கிறோம் என கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த செயலாளரால் எழுதப்பட்ட தாளை பெற்று குப்பையில் போட்டார். அன்று உலமா கட்சித்தலைவர் அவ்வாறு செய்திருக்காவிட்டால் இன்று இந்த அமைப்புக்கள் 
எதுவும் இருந்திருக்காது. இதன் காரணமாகவே மஹிந்தவுடன் இருந்த முஸ்லிம் 
அரசியல்வாதிகள் சிலர் எப்படியாவது உலமா கட்சித்தலைவரை 
மஹிந்தவிடமிருந்து தூரப்படுத்தினால்த்தான்  தம்மால் இதனை சாதிக்க முடியும் என திட்டம்கட்டி செயற்பட்டனர்.

கடைசியில் மஹிந்த 
தோற்றவுடன் அவர்களில்பலர் முகவரியற்று போயினர். இன்னும் சிலர் தேர்தல் காலத்தில் நல்லாட்சி பக்கம் இணைந்து கொண்டு மேற்படி முஸ்லிம்
அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.

இதன் விளைவே அமைச்சர் விஜேதாசவின் அறிவிப்பாகும்.
அன்று இவ்வாறான பிரச்சினையின் போது உலமா கட்சித்தலைவரின் 
கருத்தைக்கேட்டதோடு முஸ்லிம் இயக்கங்களை தடை செய்யாத மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த இயக்கங்கள்கூட பகிரங்கமாக நன்றி தெரிவிக்க முன்வராத நன்றி கெட்டவர்களாக இருந்தார்கள். இன்று இவர்கள்
வக்காலத்து வாங்கும் இந்த அரசின் அமைச்சர் இவர்களை பயங்கரவாதிகள் 
என சொல்லாமல் சொல்கிறார்.

மேற்படி சிவில் முஸ்லிம் அமைப்புக்கள் ஒரு யதார்த்தத்தை புரிந்து கொள்ள 
வேண்டும். அதாவது நீங்கள் எவ்வளவுதான் அரசை காக்காய் பிடித்தாலும் அவர்கள் நீங்கள் சொல்வதை விட கூட இருக்கும் அரசியல்வாதிகள் சொல்வதையே கேற்பர். காரணம் ஜனநாயகத்தை ஏற்ற அரசியல் கட்சி பயங்கரவாததுக்கு துணை போகாது என்பதை அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

இதனால்த்தான் உலமா கட்சி சமயம் மற்றும் அரசியலை இணைத்து ஜனநாயக
அரசியல் கட்சியாக செயற்படுகிறது.

ஆகவே இனியாவது மேற்படி ஜமாஅத்துக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி 
தெரிவித்து உலமா கட்சி மூலம் அதனை அவருக்கு தெரியப்படுத்துவதன் மூலம் இந்த நன்றி கெட்ட அரசுக்கு பாடம் புகட்டி எதிர் காலத்தில் 
இவ்வாறான தடை முயற்சிக்கெதிராக பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவை பேச வைக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
முஸ்லிம் உலமா கட்சி.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.