"முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த அரசியலையே நாம் மேற்கொள்கின்றோம்" NFGG தவிசளர் அப்துர் ரஹ்மான்.

Written By avathani Media Network on Saturday, October 22, 2016


(NFGG ஊடகப் பிரிவு)

'முழுக்க முழுக்க மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே நாம் எமது சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம் என்பதற்கு இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் இந்த வீதியும் மற்றுமொரு உதாரணமாகும்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG )யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடி பாலமுனை CIG வீட்டுத் திட்டப் பகுதியில் NFGGயின் சொந்த நிதியைக் கொண்டு அமைக்கப்பட்ட வீதியினை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு கடந்த 16.10.2016 அன்று பாலமுனையில் நடை பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

'அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்பதே எமது அடிப்படைக் கோட்பாடாகும். அந்த வகையில் மக்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அரசியல் இலாப நட்டக் கணக்குகளின் அடிப்படையிலின்றி மக்களின் தேவை முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் பிரச்சாரத்திற்காக இப்பகுதிக்கு வருகை தந்த வேளை இப்பகுதி மக்கள் படும் கஸ்டங்களை நேரில் கண்டேன். நடந்து கூட சொல்ல முடியாத அளவு இவ்வீதி கால் புதையும் மணல் வீதியாக காணப்பட்டது. இப்பகுதியில் கனிசமான வாக்கு வங்கி இல்லையென்பதன் காரணமாகவே இவ்வீதி ஏனைய அரசியல் வாதிகளெல்லாம் அமைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருகலாம் என நினைக்கிறேன்.

தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் எமது சொந்த நிதியினைக் கொண்டாவது மக்களின் இரண்டு தேவைகளைப் பூர்த்தி செய்து தருவதாக நான் அப்போது வாக்குறுதியளித்திருந்தேன். அதிலொன்று காத்தான்குடி ஆற்றாங்கரை மீனவர்களுக்கானது அவ்வேலைத்திட்டம் தற்போதுநடைபெறவுள்ளது. மற்றையது இந்த வீதியாகும். இதற்கு கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ரூபா எமது சொந்த நிதியைச் செலவு செய்தோம்.மக்களின் போக்கு வரத்திற்கேற்ற ஒரு சிறந்த வீதியாக இப்போது அமைந்திருக்கிறது.

தேர்தல் காலத்தில் நான் வாக்குறுதியளித்திருந்த இன்னுமொரு விடயத்தினையும் இங்கு நினைவு படுத்த வேண்டும். அதாவது, பாராளுமன்ற பிரதிநிதித்துவம் நமக்குக் கிடைக்கின்ற போது எமக்கு வழங்கப்படும் தனிப்பட்ட சம்பளம் , கொடுப்பனவுகள் அனைத்தையுமே மக்களின் தேவைக்காகவே செலவிடுவோம் எனவும் தெரிவித்திருந்தோம்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கொடுப்பனவுகள் சலுகைகள் என்பவற்றை கணக்குப் பார்க்கும் போது வருடமொன்றுக்கு ஐம்பது இலட்சம் ரூபா கிடைக்கும் என வைத்துக் கொள்வோம். இதில் ஒரு சிறிய பகுதியையாவது எமது எம்.பி.க்கள் எவராது மக்களுக்காக செலவு செய்திருக்கிறார்கள்...இல்லை. இது பற்றி அவர்கள் எவரும் மக்களிடம் பேசுவதும் கிடையாது. ஆனால், எமக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருந்தால் கடந்த ஒரு வருடத்தில் அவ்வாறான தனிப்பட்ட கொடுப்பனவுகளை மாத்திரம் பயன்படுத்தி இது போன்ற 25 வேலைத்திட்டங்களை செய்திருக்க முடியம்.

எனவே, முழுக்க முழுக்க மக்களுக்கான அரசியல் என்பதன் மூலம் நாம் எதை அர்த்தப்படுத்துகிறோம் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு , எவ்வாறான அரசியல் முறையினை மக்கள் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் வாக்குகளைப் பெற்ற பின்னர், அதே மக்களின் வரிப் பணத்திலிருந்து அரசியல் வாதிகளுக்கான அனைத்து சௌகரியங்களையும் பெற்றுக் கொடுக்கும் அரசியல் முறையா..? அல்லது , தமக்கு கிடைக்கும் அனைத்தையும் மக்களுக்காகவே செலவு செய்யும் அரசியல் முறையா ...? எது மக்களுக்கு பிரயோசனமானது என்பதனை மக்கள் மிகத் தெளிவான முறையில் தீர்மானித்து அதனை வளர்த்தெடுக்க வேண்டும்."



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.