கிழக்கு மாகாண ஆசிரியர் சர்ச்சைக்கு முடிவு

Written By avathani Media Network on Tuesday, October 18, 2016


இலங்கையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளிலிருந்து படித்து முடித்து வெளியேறிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு வெளி மாகாண பாடசாலைகளில் நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பாக எழுந்த சர்ச்சை இன்று (17.10.2016) திங்கட்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளது. 

இதனையடுத்து அனைத்து ஆசிரியர்களும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெறவிருப்பதாக மாகாண முதலமைச்சர் செயலகம் கூறுகின்றது. 

மத்திய கல்வி அமைச்சுக்கு இன்று திங்கட்கிழமை நேரடியாக சென்றிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் கல்வி அமைச்சு செயலாளரை சந்தித்து கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற முடிந்ததாக முதலமைச்சர் செயலகம் தெரிவிக்கின்றது. 

மாகாண முதலமைச்சர் சென்றிருந்த வேளை கல்விச் செயலாளர் அங்கு இல்லாத நிலையில் ´´ இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை வெளியேற போவதில்லை ´´ என கூறி அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது. 

இதனையடுத்து கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட உரிய அதிகாரிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது என பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன. 

இந்த சந்திப்பில் வெளி மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சகல ஆசிரியர்களையும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்க இணக்கம் காணப்பட்டு அது தொடர்பான உறுதிமொழியும் உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய கல்வி அமைச்சு நிர்வாகத்திலுள்ள கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்று வெளியேறிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஆசிரியர்களில் அநேகமானோர் வெளி மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ளனர். 

இரு வாரங்களுக்கு முன்பு நியமனம் பெற்ற இந்த ஆசிரியர்கள் நாளை மறு தினம் புதன்கிழமைக்கு முன்னதாக தங்கள் பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 

கிழக்கு மாகாணத்தில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் வெளி மாகாண பாடசாலைகளுக்கு இவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் மாகாண சபைக்கும் மத்திய கல்வி அமைச்சுக்குமிடையில் சர்ச்சை எழுந்தது. 

மாகாண சபைக்குரிய அதிகாரத்தில் மத்திய கல்வி அமைச்சின் தலையீடு என இதனை சாடியிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார். 

இது தொடர்பாக பிபிசியுடன் பேசிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னதாக தீர்வை பெற வேண்டும் என்பதற்காககே தான் கல்வி அமைச்சுக்கு நேரடியாக சென்றதாக கூறினார். 

வெளி மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் கடமையேற்பதற்கு நாளை மறுதினம் புதன்கிழமை வரை வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கவும் இன்றைய சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவிக்கின்றார். 

அந்த காலப்பகுதிக்குள் இவர்களுக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமனத்தை வழங்கக் கூடியதாக இருக்கும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் நம்பிக்கையும் வெளியிட்டார்.

AD
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.