டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனையில் விசேட கழிவகற்றல் திட்டம்!

Written By avathani Media Network on Wednesday, September 28, 2016

(அஸ்லம் எஸ்.மௌலானா)



தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை (29) தொடக்கம் சனிக்கிழமை (01) வரை விசேட கழிவகற்றல் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.


இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; 


"கல்முனை வடக்கு மற்றும் தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுடன் இணைந்து இம்மூன்று தினங்களிலும் கல்முனை மாநகர சபை முன்னெடுக்கவுள்ள இத்திட்டத்தின் பிரகாரம் வீடு, வளவுகளில் தேங்கிக் கிடக்கும் வெற்றுப் போத்தல்கள், தகர டப்பாக்கள், சிரட்டை, காட்போட், பிளாஸ்டிக் பொருட்கள், கடதாசிகள், டயர்கள் மற்றும் ஏனைய மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய பொருட்கள் பிரத்தியேகமாக சேகரிக்கப்படவுள்ளது.


பொது மக்கள் இப்பொருட்களை மாத்திரம் வேறுபடுத்தி, நடமாடும் மீள்சுழற்சி வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும். அல்லது இவற்றை பொதி செய்து, மருதமுனை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கலாசார மணடபத்தின் அருகிலுள்ள மீள்சுழற்சி நிலையத்தில் காலை 7.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரை ஒப்படைக்கலாம்.


அதேவேளை ஏனைய உக்கக்கூடிய சமையறைக் கழிவுகள் மற்றும் இலைகுழைகள் என்பவற்றை கல்முனை மாநகர சபை வாகனத்தில் ஒப்படைக்கலாம். அல்லது பெரியநீலாவணையிலுள்ள சேதனப் பசளை நிலையத்தில் காலை 7.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரை ஒப்படைக்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் வேறுபடுத்தப்படாத மொத்தமான திண்மக் கழிவுகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.


இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நோய்கள் அற்ற ஒரு பிரதேசமாகவும் சுற்றாடல் சுகாதாரத்தை சிறப்பாக பேணும் ஒரு இடமாகவும் எமது பிரதேசத்தை உருவாக்குவதற்கு பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது' என்றார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.