மாலபே கல்லூரி மாணவர்களின் உயர்தர பெறுபேற்றை வௌியிட முடியுமா? எஸ்.பிக்கு சவால்

Written By avathani Media Network on Wednesday, August 10, 2016


மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி மாணவர்களின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிடுமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்துள்ளது. 

மாலபே தனியார் வைத்திய கல்லூரி, அரச வைத்திய பீடங்களை விட உயர் தரத்தைக் கொண்டுள்ளதாகவும், அந்த மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அரச வைத்திய பீட மாணவர்களுடன் ஒப்பிடுகையில் உயர் மட்டத்திலுள்ளதாகவும், நேற்று எஸ்.பி.திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். 

அமைச்சரின் இந்தக் கூற்று உண்மை எனில், கடந்த ஆட்சியில் பல வருடங்கள் உயர்கல்வி அமைச்சராக இருந்த எஸ்.பி.திஸாநாயக்கவே இந்த நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இது தொடர்பில் அச் சங்கத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அரச பல்கலைக்கழக கட்டமைப்பை குறைத்து மதிப்பிடும் வகையில் கருத்து வௌியிட்ட அமைச்சர் குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.