கொழும்பு நகரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான சட்டத்துக்கு முரணான நடை வியாபாரிகள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.
அதன்படி சட்டவிரோத நடை வியாபாரிகளை உடனடியாக அகற்றுமாறு மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா பொலிஸாருக்கும், கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட ஆய்வின் போது 1158 சட்டவிரோத வியாபாரிகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
அண்மையில் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த ஆய்வு விபரம் குறித்து கூறப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு நகர எல்லைக்குள் 720 பேர் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அதில் 699 பேர் புறக்கோட்டை பிரதேசத்தில் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடியவர்கள் என்று தெரியவந்துள்ளது.
நடைபாதைகளில் அனுமதியற்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 221 லொத்தர் விற்பனை கூடங்களும், சட்டவிரோதமாக வாகனங்களில் விற்பனை செய்யும் 120 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் நடைபாதைகளில் 45 பத்திரிகை விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த ஆய்வில் அறியமுடிந்துள்ளதாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறியுள்ளது.

