காணாமல் போன மாணவியை விடுவிக்க 75 லட்சம் ரூபா கப்பம் கோரும் கும்பல்

Written By avathani Media Network on Friday, August 26, 2016


காணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கூறி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

யாழ். உடுவில் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த பரமரத்தினம் தவமலர் (வயது 50) என்பவரே நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, 

பம்பலபிட்டி சென் கிளியர் பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றிய பரமரத்தினம் றொகாண் தர்மினி (19) என்ற மாணவி கடந்த 23 ஆம் திகதி காணாமல் போயுள்ளார். 

காணாமல் போன மாணவி தொடர்பில் தாயார் பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து விட்டு நேற்று முன்தினம் (24.08) அன்று தனது சொந்த ஊரான மானிப்பாய்க்கு வருகை தந்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் அவர்களது வீட்டிற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், காணாமல் போன மகளை விடுதலை செய்து தருவதாக கூறியதுடன், 75 லட்சம் ரூபா பணத்தினை தயார் படுத்துமாறும் கூறியுள்ளார். 

அத்துடன், அவ்வாறு பணத்தினை தயார்படுத்தாவிடின், தற்போதைய சூழ்நிலை தெரியும் தானே என்றும், அதற்கு ஏற்றவாறு பணத்தினை தயார் செய்யுமாறும், தாங்கள் கூறுமிடத்திற்கு வந்து பணத்தினைத் தருமாறும் கூறிவிட்டு சட்டடென்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

அந்த மர்மநபர் வெளியேறியதும், குறித்த பெண்மணி உடனடியாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 

அதேவேளை, அண்மையில் மானிப்பாய் சங்குவேலிப் பகுதியில் பிரணவன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

வெட்டிக் கொலை செய்யப்பட்ட நபரை வெட்ட வந்தவர்கள் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா என்று அழைக்கப்படும் சன்னா மற்றும் அவரது நண்பர்கள் என மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதுடன், காணாமல் போன யுவதி சன்னாவின் குழுவில் இருந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.