03-08-1990 இரவு 07-45 மணி

Written By avathani Media Network on Wednesday, August 3, 2016



(எம்.எல்.எம்.அன்ஸார்)
=========================

எனதிரு பள்ளிவாயல்களின்

தொழும் தரைகளில் மையித்துக்களை சரித்து

ஹவுளுகளை இரத்தத்தை ஊற்றி நிரப்பிவிட்டு

தப்பியோடியவர்களை துரத்தி எழுதுகிறேன்!

*

அழ்ழாஹ் ஒருவனைத் தவிர

வேறெதுவுமே நினைவுக்கு வராத

சுஜூதின் தியான மகிமை மீது

வனப் பன்றிகளின் குணத்தை

அள்ளிக் கொண்டுவந்து கொட்டி

இன வெறியாடியவர்களின்

மிருக உருவான முகங்களை நான் சரியாகக் கண்டேன்!

*

103 தொழுகையாளிகளின் புத்தம் புனித உயிர்களை

துப்பாக்கிக் குழல் வைத்து

பதறக் கதற உறிஞ்சிக் குடித்து

குருதித் தாகம் ஆற்றிய மனித வெறிப் புலிகளின்

காட்டு முகவரியை காட்டித்தர

துணிவிருக்கிறது எனக்கு!

*

இரவுச் சாப்பாடு சமைத்துண்பதற்காக

சுட்டுக் கொன்று

மனித சதைகளை

குதறி வேட்டையாடிய போராளி(?)களின்

கொலை வீரத்தை

காத்தான்குடிப் பள்ளிவாயல்களின்

கிப்லாத் திசை சுவர்கள்

சல்லடைகளாக சுவடு வரைந்து வைத்திருக்கிறன!

*

அரை மணிக்கும் குறைவான நேரத்தில்

ஐம்பத்தியெட்டு விதவைகளை

ஒரே குறிச்சியில் மாத்திரம் உண்டாக்கிய

புலிகளின் உலக மகா கொடுமையை

எனது ஊரின் "இத்தா" வீடுகள்

வாசல் கதவோரம் தாங்கி நிற்கின்ற

வரலாற்றுச் சோகம்!

*

தொழுகை பழகிக் கற்கும் ஆன்மீக ஆர்வத்தில்

மீரா ஜும்ஆ , ஹுசைனியா மஸ்ஜித்களுக்குச் சென்ற

பாலகச் சிறுவர்கள் பதினைந்து பேர்

இரத்தத்தில் மிதந்த

நெஞ்சுடைந்த அகோரத்தை நிகழ்த்திவிட்டு

ஓடியொளித்த ஆயுத அரக்கர்களின்

மண் மூட்டைப் பதுங்கு குழிகளை தேடிச் சென்று

குண்டு வீசிச் சிதறவைப்பதற்கு

தேவையான கோபம் எனது சட்டைப் பைக்குள் இருக்கிறது!

*

அழகியவிரு இறை இல்லங்களிலும்

அழுகுரல் கண்ணீர் நிரம்பி வழிந்தோடி

முழு ஊருமே மூழ்கிப் புதைந்து போன பெருந்துயர்!

சிவப்பாய் இருட்டுப்பட்டது காத்தான்குடியின் இவ்விரவு!

*

எனது சாந்த இயல்பை

இரத்தத்தால் அடுப்பு மூட்டி கொலைகளால் கொதிக்க வைத்த

நரபலியர்களுக்கு எச்சரித்துச் சொல்லுகிறேன்!

ஐந்து நேர அவ்வல் ஜமாஅத் போன்று

ஆயுதப் பயிற்சிக்குப் போய் வருவதும்

ஆறாவது அவசியமாக ஆகிவிட்டது எந்தனூர் பொடியன்களுக்கு!

04-08-1990






Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.