ஜவாத் MPC ஏற்பாட்டில் கல்முனை நகரில் சுற்றுலா பயணிகளுக்கான Comfort Center

Written By avathani Media Network on Tuesday, July 19, 2016


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் ஜவாத் அவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சபையின் முப்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் கல்முனை நகரில் சுற்றுலா பயணிகளுக்கான நலனோம்பு நிலையம் (Comfort Center) ஒன்று அமைக்கப்படவுள்ளது.

முன்னாள் மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அவர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.


கல்முனை மாநகர சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள இதற்கான அமைவிடத்தை நேற்று திங்கடகிழமை மாலை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சகிதம் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் ஜவாத் பார்வையிடடார். இதில் ஆசிய பவுன்டேஷன் நிகழ்ச்சித் திட்ட நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் அவர்களும் பங்கேற்றிருந்தார்.


இதன்போது குறித்த நிலையத்திற்கான கட்டிடக் தொகுதியை நிர்மாணிப்பது மற்றும் அதில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் ஜவாத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.


கல்முனை பிரதான பஸ் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் பொது நூலகத்திற்கு அருகில் இந்நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கல்முனை நகருக்கு வருகின்ற சுற்றுலா மற்றும் உள்ளூர் பயணிகள் தமக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வதுடன் குளியல் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி, சிறிது நேரம் ஓய்வு எடுத்துச் செல்லும் பொருட்டே கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டுடன் இந்நிலையம் அமைக்கப்படவிருப்பதாக ஆணையாளர் ஜெ.லியாகத் அலி தெரிவித்தார்.


இந்நிதியொதுக்கீட்டுக்காக முயற்சிகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துர் ரஸ்ஸாக் ஜவாத் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.