(ஜுனைட்.எம்.பஹ்த்)
புனித ரமலான் மாதம் வந்துவிட்டால் ஏழை மக்களுக்கு பொருளாதார ரீதியாக சிறு திருப்தி ஏற்படுவது போன்று வேறு சில வழிகளில் சிரமங்களையும் எதிர்நோக்கும் நிலை ஏற்படுகிறது.
அதாவது ரமலான் காலத்தில் இலவசமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் ஈத்தம்பழம்,கஞ்சி எனத்தொடங்கி மஃமூம் காசி வரை தொடர்ந்து செல்கிறது பள்ளிவாயல் நிர்வாகிகளின் அட்டகாசங்கள்..
இந்த ரமழான் காலத்தில் அதிகமான மக்கள் வழமையான நாற்களில் செய்யும் அமல்களை விட அதிகமாக அமல் செய்வதற்கு வசதியாக பள்ளிவாயல்கள் ஒழுங்கு செய்யப்படும். அதில் ஒரு விடயமாக இரவு நேர வணக்கங்களை மேற்கொள்வதற்காக மேலதிகமாக இரு இமாம்கள் நியமிக்கப்படுவார்கள். ரமலான் மாதம் முடிவடையும் இறுதி கட்டத்தில் இவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படும். இது பள்ளிவாயல் நிர்வாகத்தின் பொருப்பு.
ஆனால் இவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்குவதற்காக அந்த பள்ளிவாயலில் இருக்கும் மஹல்லா வாசிகள்(மக்கள்) பெருநாள் தினத்தன்று தங்களால் முடியுமான சில தொகை பணத்தை மனமுவந்து கொடுப்பார்கள்.. இந்த முறை சில காலங்களுக்கு முன்பாக அமுலில் இருந்தது..
இன்று இந்த முறை மாற்றமடைந்து அந்த பள்ளிவாயல் நிர்வாகம் ஒரு தொகையினை தீர்மானித்து மஹல்லா வாசிகளிடம் வீடுவீடாகச் சென்று பலவந்தமான முறையில் அத் தொகையினை பெற்றுக்கொள்வதாக அறிய கிடைக்கிறது. இது நியாயமானதா?
நான் அறிந்தவரை சில சிறிய பள்ளிவாயல்கள் தீர்மானித்த மஃமூம் பணத்தின் குறைவான தொகை 500/= ரூபாவாகும்.
இன்று எத்தனையோ சகோதரர்கள் நோன்பு திறப்பதற்கு சோடீஸ் வாங்க பணம் இல்லாமல் அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமலும் நம் மத்தியில் வாழ்கிறார்கள்.. இவர்களிடம் மஃமூம் பணம் 500/= கேட்டு பலவந்தப்படுத்துவதும் தராவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்வதாக மிரட்டுவதும் நியாயமானதா?
மஃமூம் பணம் மஹல்லாவாசிகள் விரும்பிக் கொடுக்கும் அன்பளிப்பே தவிர கட்டாயம் குறிப்பிட்ட தொகை கொடுக்க பள்ளிவாயல் நிர்வாகிகளிடம் பெற்ற கடன் தொகை அல்ல என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்..
எனவே இவ் விடயம் தொடர்பாக பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் ஜம் இய்யதுல் உலமா ஆகிய பள்ளிவாயலகளுக்கு பொருப்பான நிறுவனங்கள் உடனடியாக மக்களை பாதிக்காத முறையில் மாற்று வழிகளை ஆலோசிக்குமாறும் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறேன்..

