இது இவ்வாறிருக்க வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரங்களினால் தெளிவுபெற்ற பல சகோதரர்கள் நபிவழி அடிப்படையில் பெண் தரப்பாரிடம் வீடாகவோ, பணமாகவோ, காணியாகவோ, வரதட்சணை எனும் வன்கொடுமைக்குள் சிக்கிக்கொள்ளாமல் திருமணம் செய்துள்ள பல சகோதரர்கள் இருக்கிறார்கள். மாத்திரமல்லாது அறியாமையால் வரதட்சணை வாங்கிய பலர் பகிரங்கமாக கடந்த காலங்களில் ஒப்படைத்த நிகழ்வுகள் வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் வேதனையான விடயம் என்னவென்றால் தன்னுடைய விடயத்தில் நபிவழியை பேணி வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்த பல சகோதரர்கள் அடுத்தவர்கள் வரதட்சணை வாங்கி செய்யும் திருமணங்களில் கலந்து கொள்வதேயாகும். இவ்வாறு தன் குடும்பம், தன் நண்பர்கள் என்று வருகின்ற போது மாத்திரம் மார்க்கத்தை புறங்காலால் எட்டி உதைத்துவிட்டு அத்திருமணங்களை முன்னின்று நடாத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அல்லாஹ்வுக்காக நேசிக்கப்பழகிய நாம் அல்லாஹ்வுக்காக வெறுக்கவும் பழக வேண்டும்.
இதை சம்பந்தப்பட்ட சகோதரர்களிடம் அணுகி நாம் கேட்டால் உப்புசப்பு இல்லாத காரணங்களை கூறி மலுப்புகின்றனர். இன்னும் சில கொள்கைவியாதிகள் திருமணத்திற்கு போகவில்லையாம். திருமணத்தன்று 11 மணிக்கு சும்மா போய் பார்த்துவிட்டு வருகிறார்களாம். எங்கே கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. வரதட்சணை திருமணத்தை புறக்கணிப்பதன் பிரதான காரணமே அதன் தாக்கத்தை திருமணம் செய்பவர்கள் உணர வேண்டும் என்பதற்காகவே! இந்த புறக்கணிப்பு வெறும் சீலைக்கு மேலால் சொரிவதை போன்றதே!
அல்லாஹ் திருமறையில் மனைவியை உன்னுடைய இடத்தில் குடியமர்த்து! என இடும் கட்டளையை மீறி அரங்கேறும் இந்த அநாச்சார நிகழ்வை புறக்கணிக்க வேண்டும் என்று நன்றாக தெரிந்திருந்தும் முன்ன் கொள்கைவாதி என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் பலர் புறக்கணிக்காமல் முன்னின்று நடாத்துவதை காணும் போது வேதனையாக உள்ளது. இவ்வாறு இரட்டை வேடம் போடும் வியாதிகள் தம்மை எதிர்காலங்களில் திருத்திக்கொள்ள முன்வர் வேண்டும்.
மூச்சுக்கு முந்நூறு தடவை குர்ஆன் சுன்னாவை மாத்திரம் பின்பற்ற வேண்டும், பித்அத் செய்ய கூடாது என்று சீர்திருத்தம் பேசும் இவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் அப்பட்டமாக மீறப்படும் வரதட்சணை திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படுகின்ற போது மாத்திரம் நபிவழியை மறப்பது ஏனோ? வரதட்சணைக்கு எதிராக வீரியமாக பிரச்சாரம் செய்ய்க்கூடிய தஃவா அமைப்புக்களின் உறுப்பினர்களும் இதில் உள்ளடங்கும். இவர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தஃவா அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டும் கோரிக்கையாக முன்வைக்கின்றேன்
அன்புடன்
JM. ஜெஸீம்
காத்தான்குடி

