ஆரையம்பதி மாணவி மீதான பாலியல் சேட்டை விவகாரமும், பரப்பப்படும் அவதூறுகளும் (சம்பந்தப்பட்ட சகோதரரின் நேரடி வாக்குமூலம்) Inbox x

Written By avathani Media Network on Monday, June 6, 2016


கடந்த இரண்டு தினங்களாக காத்தான்குடியை சேர்ந்த சகோதரர் நிம்ஸாத் என்பவர் ஆரையம்பதி மாணவி ஒருவர் மீது பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாகவும், பொது மக்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் சர்வசாதாரணமாக பரப்பப்பட்டு வரும் செய்தி குறித்து தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கின்றேன்.

இச்சம்பவம் இடம்பெற்ற வியாழக்கிழமை (02.06.2016) அன்று குறித்த செய்தி எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டாலும் அந்த நேரம் இரவு வேளை என்பதால் அடுத்த நாள் நானும் எனது நண்பர் ஒருவரும் காத்தான்குடி காவல் நிலையத்திற்கு சென்ற போது சகோதரர் நிம்ஸாத் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என்பது தெரிய வருகிறது. இதனால் நீதிமன்றத்திற்கு சென்றால் பார்க்கலாம் என்பதால் மட்டக்களப்பு நீதிமன்றத்தை நாடி சென்றோம். அங்கே நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் சகோதரர் நிம்ஸாதை சந்திக்கிறோம்.

அவரது கண்ணீருடன் இருந்த நிலை எம்மையும் மிகுந்த சங்கடத்திற்கு உட்படுத்தியது.

அப்போது நடந்த சம்பவத்தை கேட்கிறோம். அவரது வாக்குமூலத்தை இங்கு பதிவு செய்கின்றேன்.

"நான் வியாழக்கிழமை நான் தொழில்புரியும் கடைக்கு வந்து மதிய உணவை சாப்பிடுவதற்காக வெளியாகி வீட்டுக்கு செல்லும் நேரம். அப்போது தீர்க்கப்படாத பாரிய கடன் இருந்ததன் காரணமாக இக்கட்டான நிலையில் ஆரையம்பதியில் உள்ள ஒருவரிடம் கடனுக்காக பணம் பெறலாம் என எண்னியவனாக ஆரையம்பதி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீதியால் சென்று கொண்டிருக்கிறேன். அப்போது திடீரென ஒரு கும்பல் என்னை வழிமறிக்கிறது. அப்போது என்னுடைய பைக்கை நிறுத்தி கொண்டிருக்கும் போதே, "நீதானடா! எங்கள் ஏரியாவைச்சேர்ந்த பெண்ணை பின்னால் தட்டியது? என அந்த கும்பலில் இருந்து சத்தம் வந்தது. நான் அதிர்ச்சிக்குள்ளாகி நான் அதனை மறுத்தேன்.

வேண்டுமென்றால் குறித்த பெண்ணை இங்கே அழைத்து வாருங்கள் என கேட்டேன். அப்போது குறித்த பாடசாலை மாணவி அழைத்து வரப்படுகிறாள். அப்போது நான் அந்த பெண்ணிடம்
"தங்கச்சி! என்னுடிய முகத்தை நன்றாக பார்! நான் தான் உன்னை பின்னால் தட்டினேனா?"
என கேட்ட போது,
"எனக்கு முகம் தெரியாது. ஆனால் உங்களை போன்று வெள்ளை ஹெல்மெட் அணிந்திருந்தான்"
என அம்மாணவி பதிலளித்தாள்.

அப்போது அந்த கும்பல் மாணவியை அனுப்பிவிட்டு,
"எங்கள் ஏரியாவிற்கு வந்து எங்கள் பெண்ணையே தட்டும் தைரியம் எவனுக்கும் இல்லை. நீதான் செய்திருப்பாய் என கூறிக்கொண்டே ஒருவன் முன்னால் வந்து என் கன்னத்தில் இடித்தான். அந்த இடியினால் உள்ளே ஏதோ பிரளயம் நடந்ததை போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் சுதாகரிப்பதற்குள் என்னை தாக்க ஆரம்பித்தார்கள். நானும் அடி தாங்க முடியாமல் என்னுடைய ஹெல்மெட்டினால் தாக்க ஆரம்பித்தேன். ஆனால் அவர்கள் 15 பேர் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் அனைவரையும் என்னால் சமாளிக்க முடியவில்லை. அந்த கும்பலின் சரமாரியான தாக்குதலால் ஒன்றும் செய்ய முடியாமல் நிலைகுலைந்து போனேன். ஓட முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. நீண்ட நேரத்துக்கு பின்னர் பொலிஸார் வந்தனர்.

"எங்கள் பெண்ணை இவன் சேட்டை பண்ணியதால் பொதுமக்களாகிய நாம் தாக்கினோம் என்று கூறியதால் என்னை பொலிஸார் கைது செய்து அழைத்து சென்றனர்.
பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் ஒருவர் என்னைப்பற்றி விசாரித்தார்.

அப்போது இன்னும் ஒரு வாரத்தில் நான் வெளிநாட்டுக்கு செல்ல இருந்ததை சொன்ன போது, "நீ செய்த தப்புக்கு வெளிநாட்டுக்கு போக முடியாது; உன்னை வெளிநாட்டுக்கு போகாமல் தடுத்து காட்டுகிறேன் பார்! நீ ஸஹ்றானின் (தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்) ஆள்தானே!" என்று சூளுரைத்துவிட்டு சென்றார். அடுத்த நாள் பொலிஸார் ஒருவர் என்னை பைக்கில் ஏற்றி கொண்டு மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றார். அங்கே நீதிபதி முன்னிலையில் விசாரனை இடம்பெற்றது. என் சார்பில் வாதிடுவதற்கு எனது தாயார் இந்து மததை சேர்ந்த அட்வகேட் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார். எனக்காக சிறந்த முறையில் வாதிட்ட அட்வகேட் அவர்களால் இந்த வழக்கு தோல்வியடையும் நிலையில் இருந்த போது, அங்கே நின்றிருந்த காவல் துறை அதிகாரி,
"இவனுடைய கேஸ் இது மட்டுமல்ல! இவன் ஹெரோயின் வைத்திருந்தான்" என திடீரென ஒரு குண்டை தூக்கி போட்டார்.அதிர்ச்சியடைந்த நான் "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஹெரோயின் பாவிக்கவுமில்லை, வைத்திருக்கவுமில்லை" என சத்தம் போட்ட போது நீதிபதி என்னை அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு இதனை நிரூபிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டதுடன் என்னை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

நிர்ப்பந்த நிலையில் வட்டிக்கு கடன் வாங்குவதற்கு சென்ற எனக்கு வட்டி எனும் பாவத்தில் விழ முன்னரே அல்லாஹ் எனக்கு கொடுத்த தண்டனையாக கருதுகிறேன்."

இதுதான் சகோதரர் நிம்ஸாத் அவர்களுடைய வாக்குமூலம். ஒருவரை பற்றிய தவறான செய்தி பரவுகின்றதென்றால் அதற்கான ஆதாரம் இல்லையென்றால் உரியவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு சொல்லும் வாக்குமூலமே ஆதாரம். மாற்றமாக யூகம் கற்பித்தல், அவதூறுகளை அள்ளி இறைத்தல், புறம் பேசுதல் போன்றவை இஸ்லாத்தில் மாபெரும் குற்றங்களாக கருதப்படுகின்றன. சகோதரர் நிம்ஸாத்துடைய வாக்குமூலத்துக்கு மாற்றமான செய்திகளே தாறுமாறாக பரப்பப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இதை ஏன் இப்படி பெரிய விடயமாக பரப்புகிறார்கள் என்று பார்த்தால் அவர் ஒரு அமைப்பின் உறுப்பினராகவும், செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வந்தமையே இதற்கு காரணம்.குறித்த அமைப்பு நல்லதா? கெட்ட்தா? என்பது குறித்து நான் பேச வரவில்லை.

ஆனால் ஒரு அமைப்பின் மீது உள்ள குரோதம் காரணமாக சகோதரர் நிம்ஸாதின், தனிப்பட்ட விவகாரத்தில் விளையாடி அவரது பாவமூட்டைகளை அள்ளி சுமக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

இந்த செய்தியை தவறாக முதலில் பரப்பியது யார் என்று நாம் பார்த்தால் காத்தான்குடியில் இயங்கும் ஒரு குறுந்தகவல் சேவையிலேயே முதலில் பரப்பப்பட்டது. இதன் பின்னரே ஊரில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியது.

மூச்சுக்கு முந்நூறு தடவை "உண்மை நேர்மை வெளிப்படை" என்று தமது ஊடகத்தின் சுலோகங்களாக அடையாளப்படுத்திக்கொள்கின்ற குறித்த ஊடகம் தனிப்பட்ட குரோதங்களை கொட்டி தீர்க்கின்ற ஊடகமாக மாறியது ஏன்? அல்லாஹ்வே நேர்வழி காட்ட போதுமானவன்.

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் எவருமே சகோதரர் நிம்ஸாதை நேரில் சந்திக்கவில்லை. சக்கிலியன் என்றும் காமுகன் என்றும் தடவல் மன்னன் என்றும் அவதூறு பரப்பும் சகோதரர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள்!

அவதூறுகளை பரப்புவதை இஸ்லாம் எப்படி எதிர்க்கிறது என்பதை பின்வரும் இறைமறை வசனங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

"நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைத்திருப்பதற்காக அதை தெளிவுபடுத்திக்
கொள்ளுங்கள்!" (அருள்மறை 49:06)

"புறம் பேசுதல் என்றால் ஏன்னவென்று உங்களுக்கு தெரியுமா? நீர் உம்முடைய சகோதரனை பற்றி அவன் விரும்பாத ஒன்றை கூறுவதாகும். அப்போது 'நான் சொல்லும் குறை அவரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுவதாக ஆகும்?)என கேட்கப்பட்டது. அதற்கு அழ்ழாஹ்வின் தூதர் நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரனிடம் இருந்தால்தான் நீர் அவரைப்பற்றி புறம் பேசுவதாக ஆகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டால், நீர் அவரைப்பற்றி அவதூறு சொன்னவராக ஆகுவீர்கள்" என்றார்கள்"
-அபூ ஹுரைரா (ரழி)
(முஸ்லிம் 5048)

"உங்கள் நாவுகளால் அதைப்பரப்பியதை எண்ணிப்பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக்கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது. இதை கேள்விப்பட்ட போது இதைப்பற்றி பேசுவது எங்களுக்கு தகாது. (இறைவா!) நீயே தூயவன்.'இது பயங்கரமான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?" (அருள் மறை 24:15- 16)

"வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகின்றான்"
(அருள் மறை 24:19)

"அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே! அதை உங்களுக்கு தீங்காக எண்ணாதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விடயத்தில் பெருமளவு பங்கெடுத்தவனுக்கு கடும் வேதனை உண்டு" (திருக்குரான் 24:11 - 12)

சகோதரர்களே! சகோதரர் நிம்ஸாதின் நேரடி வாக்குமூலத்தை அறிந்துகொள்ளாமல் அவதூறு பரப்பும் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இதை முகநூலில் ஷெயார், பண்ணியும், லைக் போட்டும், போஸ்ட்டாக இட்டும் சிறிதளவேனும் பங்கDஉத்த அனைவருக்கும் அவதூறுக்கான பங்கு உண்டு என்பதை மறவாதீர்கள்.
பொய்களை பரப்பும் ஊடகங்களே! பரபரப்புக்காக பொய்யான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்காதீர்கள்! அல்லாஹ் உங்களையும் மறுமையில் கணக்கு தீர்ப்பான் என்பதை மறக்க வேண்டாம்.
அல்லாஹ்வே அறிந்தவன்.

அன்புடன்
JM. ஜெஸீம்
காத்தான்குடி
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.