பயணச்சீட்டின்றி தனியார் பஸ்களில் பயணிப்போரிடம் தண்டப்பணம் அறிவிடத் தீர்மானம்

Written By avathani Media Network on Sunday, June 26, 2016


பயணச்சீட்டின்றி தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் தண்டப்பணம் அறவிடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சரின் ஆலோசனைக்கமைய இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.பீ.ஏ. ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.

தற்போது தனியார் பஸ்களில் பயணச்சீட்டுக்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் சில பஸ்களில் இது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

புதிய வேலைத்திட்டத்திற்கமைய, பயணச்சீட்டுக்களை வழங்குமாறு பயணிகளால் நடத்துனருக்கு அழுத்தம் விடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

புதிய சட்டத்திற்கமைய பயணச்சீட்டின்றி பயணிக்கும் பயணியொருவர் பஸ் கட்டணத்தைப் போன்று இரு மடங்கு பணத்தை செலுத்த வேண்டும் என்பதுடன் 2000 ரூபா அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலதிகமாக குறித்த பஸ் நடத்துனரின் அனுமதிப்பத்திரமும் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும் என தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இந்த சட்டத்தை உள்ளடக்கி விரைவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சட்டத்தில் புதிய சீர்த்திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.