அருள் சொரியும் அற்புத மாதம்

Written By avathani Media Network on Saturday, June 4, 2016


(மதியன்பன்)

அடிவானிற் பிறை தெரிய அகமெல்லாம் நகை விரிய
  அல்லாஹ்வின் ஏவல் வரும் நோன்பாய் - அதை
அகம் மகிழ ஏற்றிடுவோம் மாண்பாய்
  விடிகின்ற பொழுதுடனே விருப்பமுடன் நோன்பிருந்து
வினைதீர்க்கும் இறையோனைத் தொழுவோம் - நம்
  வினை யென்னி மனமுருகி அழுவோம்.


நோன்பிருக்கும் காலத்தில் நோவினைகள் செய்யாது
  நொந்தவர்க்கு உதவிகளைச் செய்வோம் - நல்ல
நோக்கமிதால் இறையருளைக் கொய்வோம்.
  வான் மறையை ஓதுவதை வல்லோன் துதி பாடுவதை
வழமையென தனதாக்கிக் கொள்வோம். - உயர்
  வளமான சொர்க்கத்தை வெல்வோம்.


இரக்கின்ற மாந்தருக்கு இருப்பதனை ஈந்தவரின்
  இதயத்தை அன்பாலே வெல்வோம். - வரும்
இடர்களினை அதனாலே கொல்வோம்.
  சுரக்கின்ற இறையருளைச் சுமந்து வரும் ரமளானை
சுமையென்று எண்ணாது ஏற்போம். - நம்
  சுற்றத்தை அன்போடு சேர்ப்போம்.


பகல்நேரம் பசித்திருந்து படைத்தவனைப் பணிந்திருந்து
  பக்தியுடன் நோன்பதனை நோற்போம். - இன
பந்துக்கள் உறவுதனைச் சேர்ப்போம்.
  நிகரில்லா இறையவனை நின்று நிதம் வணங்குவதை
நிலையாக வாழ்க்கையிலே கொள்வோம். - பின்
  நிறைவான சொர்க்கத்தை வெல்வோம்.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.