(எம்.எஸ்.எம்.சாஹிர்)
இலங்கை துறைமுக அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று முன்தினம் (27) திங்கட்கிழமை மருதானை பூக்கர் வரவேற்பு மண்டபத்தில் மாலை 5.00 மணி முதல் நடைபெற்றது.
முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் ஐ.எம்.ஹாரிஸின் வேண்டுகோளுக்கிணங்க, நடத்தப்பட்ட இந்நிகழ்வில்,
பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீர் வழங்கல் மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், முன்னாள் அமைச்சர் பஸீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹசனலி, மேல்மாகாணசபை உறுப்பினர்களான பாயிஸ், அர்சாத் மற்றும் துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.டி.ஏ.எஸ் பிரேமச்சந்திர, துறைமுக அதிகார சபையின் மேலதிகாரிகள் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் சிரேஷ்ட உப தலைவர் எம்.எம்.எஸ். இல்ஹாம் மௌலானா, செயலாளர், யூ.எல் ஜௌபர், பொருளாளர் எம்.ஹக்கம் மற்றும், நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உரையாற்றும் போது,
தற்போது உள்ள அரசாங்கத்தில் ஜாதி மதம் என்ற பாகுபாடு ஒழிக்கப்பட்டு எல்லோரும் ஒரு தாய் மக்களாக வாழுகின்றோம். மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் துறைமுகங்கள் அமைச்சராக இருக்கும் போது ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த இப்தார் நிகழ்வு, இன்றும் 19ஆவது வருடமாக இடம்பெறுகிறது. இனிவரும் காலங்களிலும் இது போன்று இப்தார் நிகழ்வுகளை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம். என்று தெரிவித்தார்.
நிகழ்வில், இராப் போஷனமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





