(ஜுனைட்.எம்.பஹ்த்)
விஷேடதேவையுடையவர்களை ஒதுக்குவது அல்லது தனியாக வேறுபடுத்தி பார்ப்பது என்பதுஅவர்களுக்கு இடையே தாழ்வு மனப்பான்மையினை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற புகலிடம் அமைப்பின் தலைவர் அருட்தந்தை தெரன்ஸ்
அவர்களின் முயற்சியினால் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில்
விஷேட தேவையுடையவர்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தனியானதோர் வகுப்பு
ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் விசேட தேவை உடைய மாணவர்கள் ஏனைய சிறுவர்களுடன் இணைந்ததாக தமது கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டுள்ளது .
இதன் மூலம் விசேட தேவையுடைய மாணவர்களும் ஏனைய மாணவர்களைப் போல நாங்களும் சமமானவர்கள் எனும் உளநிலை ஏற்பட ஏதுவாக இருக்கும்.
இது உண்மையில் பாராட்டத்தக்கதோர் விடயமாகும். இதைப்போன்ற கற்றல் நிலையங்கள்
எமது பகுதிகளிலும் உருவக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே இவ்வாறான கற்றல் நிலையங்களை எமது பகுதிகளிலும் உருவாக்குதல் தொடர்பான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்காக 2016.05.05ஆந்திகதி
வியாழக்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்
அவர்கள் அருட்தந்தை அவர்களை நேரில் சென்று சந்தித்தார்.
இதன் போது விசேட
தேவையுடைய மாணவர்களை எவ்வாறு சாதாரண பாடசாலைகளில் சேர்ப்பது இதற்குத் தேவையான
ஆசிரியர்கள் ,விசேட உபகரணங்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளுதல் என்பன போன்ற மிக முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. விசேட தேவையுடைய மாணவர்கள்
தொடர்பான விழிப்பூட்டல் ஒன்றை சாதாரண மாணவர்களிடையே ஏற்படுத்தல் மூலமாகவும் இரு தரப்பு மாணவர்களிடமும் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தல் மூலமாகவுமே விசேட
தேவையுடைய மாணவர்கள் சாதாரண பாடசாலையில் கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என இனங்காணப்பட்டதுடன் இம்முறையை அமுல்படுத்தல் தொடர்பிலும் விரிவாக
ஆராயப்பட்டது. பரீட்சாத்த நடவடிக்கையாக இந்த செயற்திட்டத்தை புகலிடம்
அமைப்பின் ஆலோசனையையும் பெற்று நடைமுறைப்படுத்துவதற்காக காத்தான்குடி மற்றும்
பாலமுனை ஆகிய கிராமங்களிலுள்ள இரண்டு பாடசாலைகள் அடையாளங்காணப்பட இருப்பதுடன் இது வெற்றியளிக்கும் பட்சத்தில் காத்தான்குடியில் உள்ள சில பாடசாலைகளுக்கும்
கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளுக்கும் இதனை விஸ்தரிக்க முடியும் என
மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.
மேலும் அத்துடன் விசேட தேவையுடையவர்கள் எவரிலும் தங்கி வாழாமல் அவர்கள் சுயமாக தொழில் செய்து தங்களது தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்கு ஏற்ற வகையில் தேசிய தொழில்
சார் தகைமையினை உள்ளடக்கியதாக தொழில் பயிற்சிகளும் வழங்குவதற்கான
நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சிப்லி
பாறுக் தெரிவித்தார்.




