காத்தான்குடி பிரதான வீதியில் விபத்துக்களை குறைப்பதற்கு பூச்சாடிகளை அகற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுமதி

Written By avathani Media Network on Tuesday, May 10, 2016


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் நடுவே சில இடங்களில் காணப்படும் பூச்சாடிகளினால் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பாக இருப்பதாக அண்மையில் காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேற்படி விடயம் தொடர்பில் அங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும், காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ,மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இப் பூச்சாடிகள் அரச சொத்துக்கள் எனவும், அதை அவ்வாறு அகற்ற முடியாது அவ்வாறு அகற்ற வேண்டுமானால் குறித்த பூச்சாடிகளினால் இடம்பெற்ற விபத்துக்கள் தொடர்பிலும்,அதை அகற்றுவதற்கான காரணங்கள் தொடர்பிலும் எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவ்வாறு சமர்பிக்கப்படும் பட்சத்தில் குறித்த பூச்சாடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினதும் ,பிரதேச செயலாளரினதும் பரிசீலனை அறிக்கை கிடைபெற்றதாகவும் அதன் அடிப்படையில் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காத்தான்குடி பிரதான வீதியின் காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயம் ,ஹிஸ்புல்லாஹ் மண்டபம்,குர் ஆன் சதுக்க சந்தி உட்பட குறித்த மூன்று இடங்களிலுமுள்ள பூச்சாடிகளை அகற்றுவதற்கு காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ,மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று 09 அனுமதி வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் 09-05-2016 இன்று காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றின் மூலம் மேற்படி அனுமதியினை அனுப்பியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெர்வித்தார்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் காத்தான்குடி பிரதேச செயலாளருக்கும்,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.