காரைதீவு முச்சந்தியில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலை திறப்பு விழா.

Written By avathani Media Network on Monday, May 2, 2016


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

இலங்கைத் திருநாடு முழுவதற்கும், குறிப்பாக அம்பாரை மாவட்ட காரைதீவுப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலை இன்று காரைதீவு முச்சந்தியில் மிகக் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

சுவாமி விபுலானந்த ஞாபகர்த்த பணிமன்றத் தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு, மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு,திருவுருவச் சிலையைத் திரைநீக்கம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், சுவாமி பிரேமானந்தஜீ, பிரதேச செயலாளர்களான திருமதி.சுதர்சினி சிறிகாந்,எஸ்.ஜெகநாதன், வீ.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும்,பெருந்தொகையான பொது மக்களும், அறங்காவலர்களும் கலந்து கொண்டு,சிறப்பித்தனர்.

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூசைவழிபாடுகளில் கலந்து கொண்ட அதிதிகள் அனைவரும் காரைதீவு முச்சந்திவரை பேன்ட் வாத்தியக் குழுவினர் சகிதம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

கடும் வரட்சியினால் மக்கள் சோர்ந்து விடாதிருக்க ஊர்வலத்திற்கு முன்னால் கனரக வாகன உதவியினால் நீர் தெளிக்கப்பட்டமை ஒரு சிறப்பம்சமாகக் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இங்கு இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் சுவாமிநான் பொன்னாடை போற்றிக் கௌரவிக்கப்பட்டார்.

இங்கு அவர் உரையாற்றுகையில்:- 'முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் காரைதீவில் மாத்திரமல்லாமல் முழு நாட்டு மக்களாலும் போற்றிப் புகழ்ந்து பாராட்டப்பட வேண்டிய ஒரு மாமனிதர். அவருக்கான திருவுருவச் சிலையைத் திறந்து வைப்பதில் நான் பெருமையடைகிறேன்'எனத் தெரிவித்தார்.










Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.