முன்பள்ளி ஆசிரியைகளுக்கு NFGG வழங்கிய இடைக்காலக் கொடுப்பனவு!

Written By avathani Media Network on Monday, April 4, 2016


(NFGG ஊடகப்பிரிவு)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்(NFGG) கிழக்குப்பிராந்திய மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின நிகழ்வும் துறைசார் முதன்மையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.04.2016)அன்று காத்தான்குடி ஹிஸ்புள்ளாஹ் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது பிரதேச முன்பள்ளி ஆசிரியைகளுக்கான இடைக்கால ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கடந்த பல மாதங்களாக NFGG யினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முன்பள்ளி அபிவிருத்தி செயற்திட்டங்களின் ஒர் அங்கமாக கடந்த 15.02.16 மற்றும் 14.03.16 ஆகிய தினங்களில் முன்பள்ளி ஆசிரியைகளுடனான இரு கலந்துரையாடல்கள் NFGGயினால் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது,அவர்களின் கருத்துக்களும் பெறப்பட்டிருந்ததோடு முன்பள்ளி ஆசிரியைகளினால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சனைகளுக்குமான இடைக்கால தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக NFGG யினால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே முதற்கட்டமாக ஆசிரியைகள் முன்வைத்த பிரதான பிரச்சனையான சம்பளப்பிரச்சனையினை கருத்திற் கொண்டு அதற்கான இடைக்காலத்தீர்வாக இக்கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

காத்தான்குடி மாத்திரமன்றி காங்கயனோடை, கர்பலா, பாலமுனை, மஞ்சந்தொடுவாய் கிராமங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியைகளும் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கருத்து தெரிவிக்கையில்.."மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனையாகவும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளினால், பிரதேச அரசியல் வாதிகளினால் கண்டு கொள்ளப்படாத தரப்பாகவும் காணப்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளை அழைத்து எமது பிரச்சனைகளை கேட்டறிந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் அதன் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தங்களுக்கு அளித்த வாக்கினை மதித்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இக்கொடுப்பனவினை தங்கள் சொந்த நிதியிலிருந்து வழங்கிவைத்தமையை நன்றியுடன் நினைவு கூர்வதாகவும்' குறிப்பிட்டார். 

'தடைகளைத்தாண்டி' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் PSM சார்ள்ஸ் மற்றும் கௌரவ அதிதிகளாக தென் கிழக்குப் பல்கலைக்கழகபேராசிரியை சித்ரலேகா மௌனகுரு, மட்டக்களப்பு மத்தி வலைய முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி SA நசீரா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

அத்துடன் நிகழ்வின் விஷேட அதிதிகளாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. ILMரிபாஸ் , NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM அப்துர்ரஹ்மான், NFGGயின் கிழக்கு பிராந்திய சபை செயலாளர் MACM ஜவாஹிர் மற்றும் NFGGயின் பிராந்திய சபை சிரேஷ்ட உறுப்பினர்கள், மகளிர் அணி உறுப்பினர்கள், பிரதேச பிரமுகர்கள், முன்பள்ளி ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் மேலும் பல கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.











Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.