திருமதி சங்கரப்பிள்ளைக்கு பிரியாவிடை வைபவம்!

Written By avathani Media Network on Thursday, April 7, 2016


(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஒருவருடைய தனிப்பட்ட குணங்கள் எவ்வாறானவையாக இருந்த போதிலும் அவர் நிர்வாகப் பதவிக்கு வருகின்ற போது நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையில் நிதிப்பிரிவு உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் திருமதி வி.சங்கரப்பிள்ளைக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று புதன்கிழமை மாநகர சபையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாநகர சபையின் காசாளர் யூ.எல்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆணையாளர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

"நிர்வாகப் பதவியில் உள்ள ஒருவர் சிலவேளை கடும்போக்குடன் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். அதற்காக அவருக்கு கீழ் பணி புரிகின்ற ஊழியர்கள், அவரைக் கோபித்துக் கொள்வது, அவர் மீது வஞ்சம் வைப்பது, அவருக்கு எதிராக செயற்படுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை நான் கண்டிருக்கின்றேன். உண்மையான ஓர் அரச ஊழியன் ஒருபோதும் அப்படி செயற்பட முற்படக்கூடாது.

எமது மாநகர சபை நிதிப் பிரிவை பொறுத்தளவில் இங்கு உத்தியோகத்தராக கடமையாற்றுவது என்பது சற்று கடினமான விடயம்தான். அவர் மிகவும் நெகிழ்வுப்போக்குடன் பணியாற்ற வேண்டியுள்ளது. அதற்காக எவரும் அஞ்சி பொறுப்புகளை ஏற்காமல் ஒதுங்கிக் கொள்ள முனையக்கூடாது. தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற தைரியத்துடன் பொறுப்புகளை ஏற்க முன்வர வேண்டும். அத்துடன் தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நிதிப் பொறுப்பை ஏற்று மிகவும் திறமையாக பணியாற்றிய ஓர் உத்தியோகத்தர் தான் இன்று இங்கிருந்து ஓய்வுபெற்றுச் செல்கின்றார். நீண்ட கால உள்ளூராட்சி சேவை அனுபவத்தைக் கொண்டுள்ள திருமதி சங்கரப்பிள்ளையின் ஓய்வு எமது மாநகர சபைக்கு பெரும் இழப்பு என்றே நான் கருதுகின்றேன்" என்றார். 

இந்நிகழ்வில் மாநகர முதல்வரின் சார்பில் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் கலந்து கொண்டு திருமதி சங்கரப்பிள்ளைக்கு பரிசுப் பொதியொன்றை வழங்கி வைத்தார். அதேபோன்று ஊழியர்களின் சார்பில் ஆணையாளர் ஜே.லியாகத் அலி பணமுடிப்பை வழங்கி வைத்தார்.

இதில் கணக்காளர் எச்.எம்.எம்.ரஷீத், பொறியியலாளர் எம்.ஐ.ஏ.மஜீத், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.





Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.