அனைத்து இலத்திரனியல் ஊடக நிறுவனங்களும் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் – ஜனாதிபதி

Written By avathani Media Network on Wednesday, April 20, 2016

மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அனைத்து இலத்திரனியல் ஊடக நிறுவனங்களும் உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (19) மாலை இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் அனைத்து இலத்திரனியல் ஊடக நிறுவனங்களினதும் பிரதானிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்தார்

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் இடம்பெறும் ஊழல் மோசடி தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின்கீழ் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலத்திரனியல் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலைவரிசைகள் அரசாங்கத்தினதும் பொதுமக்களினதும் சொத்து என்பதால் மக்களின் நலனுக்காக உண்மையான தகவல்களை வெளியிட வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனங்களுக்கு உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சில நிறுவனங்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தை மீறி செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எதிர்காலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.

Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.