இவரைப்போன்றவர்களால் இஸ்லாம் சிறப்புறுமா?

Written By avathani Media Network on Thursday, April 21, 2016


(முஹம்மது நியாஸ்)

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்த சிவசேனா கட்சியின் தலைவர் சுசில் குமார் ஜெயின் கடந்த பெப்ரவரி மாதம் இஸ்லாத்தை ஏற்றதாகவும் அதை இன்று 20: 04: 2016 பகிரங்கமாக அறிவித்துள்ளதாகவும் அந்நாட்டில் இயங்கிவருகின்ற சில ஊடகங்களும் தனிநபர் தகவல்களும் தெரிவிக்கின்றன.

சிவசேனா இய்க்கத்தை, அரசியல் கட்சியை பொறுத்தவரைக்கும் இதுகாலவரை இஸ்லாமிய சமூகத்தின் மீது பலதரப்பட்ட வழிகளிலும் மிகவும் கொடூரமான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்ற ஒரு பயங்கரவாத இயக்கமாகும்.

ஆனாலும் இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தலரை சிவசேனா இயக்கத்தின் தலைவர் மாத்திரமல்ல, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக இவ்வாறு அறிவித்தாலும் அதனால் இஸ்லாத்தினுடைய சிறப்பம்சங்களில் எதுவித மாற்றங்களும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

மரணத்தின் பின்னரான நிரந்தர வாழ்க்கை நிம்மதியாக இருக்கவேண்டுமானால் உலகில் மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வியல் நெறியாக புனித இஸ்லாமிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்தேயாக வேண்டும் என்பது இறைவன் வகுத்த விதி.

இன்று சிவசேனாவின் தலைவரைப்போன்று நாளை பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கூட இஸ்லாத்தை தழுவலாம். அவ்வாறு இஸ்லாமிய அரங்கத்தினுள்ளே அவர் காலடியெடுத்து வைக்கின்றபோது ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் அவரை ஆரத்தழுவி, உச்சி முகர்ந்து, முத்தமிடக்காத்திருக்கிறது.

ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கத்தை பூண்டோடு ஒழிப்பதற்காக சபதமேற்று செயற்பட்டவர்கள்தான் பிற்காலத்தில் அந்த புனித மார்க்கத்திற்கு புத்துயிர் அளிக்கின்ற புடம்போடப்பட்ட வீர புருஷர்களாக பரிணமித்திருக்கிறார்கள் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாற்று உண்மை.

எனவே இஸ்லாத்தை கங்கணங்கட்டி 
எதிர்க்கின்ற ஒருவர் அந்த புனித மார்க்கத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்பதும் மறுப்பதும் அந்த நபருடைய இம்மை மறுமை வாழ்வின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்குமே தவிர அதனால் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எந்தவொரு சிறப்புக்களோ, பெருமைகளோ அதிகப்படியாக வந்து சேர்ந்துவிடாது என்பதை நினைவில் நிறுத்துவோம்.

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால், நபியே உங்களுக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள். நபியே! நீர் கூறுவீராக. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றதால் எங்களுக்கு எந்த உதவியும் இல்லை! மாறாக அழ்ழாஹ்தான் உங்களுக்கு ஈமானின் பக்கம் வழிகாட்டி உங்களுக்கு உபகாரம் செய்திருக்கின்றான்.
(AQ.49:17)
Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.