நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் சிங்கள-தமிழ் மொழித் தேர்ச்சிகளை ஏற்படுத்தும் நோக்கில் குட்வே மொழிச் சங்கம், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையோடு நடாத்திய ஒரு வருட பயிற்சியை முடித்துக் கொண்டவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நிந்தவூர் மாவட்ட தொழிற் பயிற்சி நிலையத்தில் இடம் பெற்றது.
குட்வே மொழிச் சங்கத் தலைவர் ஏ.அப்துல் நசார் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் தேசிய ஒருங்கிணைப்பு மொழிகள் பணிப்பாளர் ஏ.கே.எம்.அனீஸ் அன்வர், ஓய்வு நிலை அதிபர்களான எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா, எஸ்.அஹமது, கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எச்.எம்.நாளீர், சிங்கள மொழி விரிவுரையாளர் திருமதி.சஹிலா நசார், பயிற்சியை முடித்துக் கொண்ட இளைஞர், யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய தினத்தில் 150 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் 'இன்று நாட்டில் சுமூக நிலை காணப்படுவதால் ஒரு அரசாங்க ஊழியன் நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று அவரது சேவையைச் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வெண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கள, தமிழ் மக்கள் அவரது சேவையை நாடி வரும்போது எந்த வித இடையூறுகளுமின்றி அவர் சேவையை வழங்கத் தயாராக இருக்க வேண்டும். எனவே மொழித் தேர்ச்சி என்பது காட்டாயத் தேவையாகும்' எனத் தெரிவித்தார்.
