ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றிருக்காது விட்டிருந்தால் மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ ஆகிய மூவரும் இன்று கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் சுயரூபம் வெளிவந்திருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். மஹிந்தவுடன் இருந்தவர்கள் அவரை கைவிட்டபோதும் ஜனாதிபதியும் நாமுமே அவருடன் இருந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் கடும்போக்கு கொள்கையில் இருந்து செயற்பட்டமைக்கான வரலாறுகள் தான் உள்ளன. அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் குடும்ப அரசாங்கத்தின் மீது உள்ள விரோதமும் எமக்குத் தெரியும். அவ்வாறு இருக்கையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலைமைகளின் போது கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றிருக்காவிடின் இன்று நிலைமைகள் மிகவும் மோசமானதாக அமைந்திருக்கும்.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷ, மற்றும் பசில் ராஜபக் ஷ ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டு இன்று மூவருக்கும் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியின் கைவரிசையை காட்டியிருப்பார்கள். அவ்வாறு இருக்கையில் ஜனாதிபதியும் நானும் கட்சிக்குள் இருந்ததனால் தான் இவர்களை காப்பாற்ற முடிந்தது.
ஆனால் அன்று மஹிந்த ராஜபக் ஷவுடன் இருந்த பசில் ராஜபக் ஷ போன்றவர்கள் கட்சியை நாசப்படுத்தியது மட்டுமின்றி மஹிந்த ராஜபக் ஷவின் தோல்விக்கும் காரணமாக இருந்தனர் என்பதே உண்மையாகும். பணத்தை கொட்டி மக்களின் ஆதரவை பெற்றுவிடலாம் என நம்பி செயற்பட்டமையே கடந்த தேர்தலில் எமது கட்சி தோல்வியை தழுவக் காரணமாக அமைந்தது.
ஆனால் மஹிந்த ராஜபக் ஷ தோல்வியை சந்தித்தவுடன் முதலில் நாட்டைவிட்டு தப்பியோடியவரும் பசில் ராஜபக் ஷ என்பதை மறந்துவிட வேண்டாம். தேர்தல் முடிந்து 24 மணித்தியாலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி மஹிந்த ராஜபக் ஷவை தனிமைப்படுத்தியவர்கள் இன்று மீண்டும் மஹிந்தவின் பெயரை வைத்து குழப்பகர அரசியலை முன்னெடுக்க பார்க்கின்றனர்.
அதற்கு மஹிந்த ராஜபக் ஷ எவ்வாறான வகையில் செயற்படப்போகின்றார் என்பதே முக்கியமானதாகும். எவ்வாறு இருப்பினும் நாம் இன்றும் அவருடன் உள்ளோம். எந்த சந்தர்ப்பத்திலும் அவரை கைவிட நாம் தயாரில்லை.
இன்று புதிய கட்சிகளை உருவாக்கி தனித்த அரசியல் பயணத்தை ஆரம்பி ப்பதாக மஹிந்த ராஜபக் ஷ கூறவில்லை. அவருடன் இருக்கும் குழப்பக்கார உறுப்பினர்களே கூறுகின்றனர். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட நாம் அனுமதிக்கமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

