குன்றும் குழியுமாக காணப்படும் காத்தான்குடி கடற்கரை வீதியும் -பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் பால்வத்தோடையும்-படங்கள்.

Written By avathani Media Network on Wednesday, April 13, 2016


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதி கடந்த பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் குன்றும் ,குழியுமாக காணப்படுவதோடு மட்டுமன்றி மக்கள் பாவனைக்கு பொருத்தமற்ற நிலையிலும் காணப்பட்டு வருவதாக அவ் வீதியை அன்றாடம் பயன்படுத்தும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

காத்தான்குடி நகர சபைக்கு சொந்தமான குறித்த வீதியை அன்றாடம் பயன்படுத்தும் பொது மக்களும்,மீனவர்களும் வெள்ளிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமை,விஷேட தினங்கள்,விடுமுறை தினங்கள் உள்ளிட்ட தினங்களில் பயன்படுத்தும் பொது மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

அத்தோடு இவ் வீதியில் பொது மக்களுக்கு மிகவும் அபாயகரமானதும் பாதுகாபற்றதுமான ஒரு பால்வத்தோடையும் காணப்படுகின்றது.
இவ் வீதியில் பள்ளிவாயல்கள்,காத்தான்குடி கடற்கரை ,ஹோட்டல்,சுற்றுலா விடுதிகள்,சிறுவர் பூங்கா,வலீமா மண்டபம்,மீணவர் கட்டிடம்,மீன் வாடிகள் என்பன அமையப் பெற்றுள்ளது.
குறித்த வீதி உட்பட பால்வத்தோடை புனரமைப்பு விடயம் தொடர்பில் சம்பந்தபட்ட அரச அதிகாரிகள்,அரசியல் பிரமுகர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு மிக விரைவில் இதற்கான நிரந்தர தீர்வான இவ் வீதியை செப்பனிட்டு தருவதோடு மாத்திரமின்றி இவ் வீதியில் காணப்படும் பால்வத்தோடையையும் பாதுகாப்பான முறையில் அமைத்துத் தர வேண்டுமெனவும் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

குறித்த காத்தான்குடிப் பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவரும்,மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,ஐக்கிய தேசிய கட்சி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள்; இருந்த போதிலும் இவ்வாறான அபிவிருத்தி நடைபெறவில்லை என்பது மிக கவலைக்குரிய விடயமாகும்.

இவ் வீதி புனரமைப்பு விடயம் தொடர்பில் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜெ.சர்வேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த வீதியை புனரமைப்பதற்கு சுமார் 25 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் இவ் வீதி புனரமைப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.












Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.