ஹூஸைனியா பாடசாலைக்கான கல்வி அபிவிருத்திவேலைத்திட்டங்கள் NFGGயினால் ஆரம்பம்.

Written By avathani Media Network on Wednesday, March 16, 2016





(NFGG ஊடகப் பிரிவு)


மஞ்சந்தொடுவாய் ஹூஸைனியா பாடசாலைக்கான கல்வி அபிவிருத்திவேலைத்திட்டங்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG) தற்போது தொடங்கி வைத்திருக்கிறது. 

காத்தான்குடியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் பாடசாலைகளில் ஒன்றான ஹூஸைனியாவித்தியாலயத்தின் நிலவரங்களை கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நேரில் சென்று பொறியியலாளர்அப்துர் ரஹ்மான் பார்வையிட்டிருந்தார்.

அப்பாடசாலையின் உடனடித்தேவைகளை அடையாளம் கண்ட அவர் அவற்றில் சிலவற்றை பூர்த்திசெய்து தருவதாகவும் உறுதியளித்திருந்தார். குறிப்பாக அப்பாடசாலையில் கல்வி கற்கும் தரம் 3,4,5 மாணவர்களை மையப்படுத்திய விசேட கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு உதவியளிப்பதாகவும் வகுப்பறைகளின் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கு உதவுவதாகவும் உறுதியளித்திருந்தார்.




அதற்கிணங்க ஏற்கனவே துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த மின்சார இணைப்பு உடனடியாகப் பெற்றுக்கொடுக்கப்பட்டது. அத்தோடு இப்பாடசாலையின் ஒரே மண்டபத்தில் அருகருகே பல வகுப்புகள்நடாத்தப்படுவதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். இதற்கான தீர்வாக குறித்த மண்டபத்தினை தனித்தனியான வகுப்பறைகளாகப் பிரித்து மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தற்போது NFGG ஆரம்பித்திருக்கின்றது. 

இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் எவரும் கடந்த வருடங்களாக ஐந்தாம் தரபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை என்பது இப்பாடசாலையைப் பொறுத்த வரையில்பெரும் பின்னடைவாகவே இருந்து வருகிறது. இதற்கான தீர்வு நடவடிக்கைகளையும் தற்போது NFGG ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் தரம் 4மற்றும் 5 இல் கல்வி கற்கும் மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்கான விசேட செயற்திட்டங்களையும் வடிவமைத்து அமுல்படுத்த NFGG தொடங்கியிருக்கிறது. 

இப்பாடசாலையின் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பில் பெற்றோர்களுக்குவிளக்கமளித்து அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்றுபாடசாலைக் கட்டிடத்தில் நடை பெற்றது. பாடசாலையின் அதிபர் AMM பாயிஸ் மௌலவியின் தலைமையில்நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டு.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் NK றம்ழான், NFGGயின் விசேடசெயற் திட்டங்களுக்கான இணைப்பாளர் ASM ஹில்மி அவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் என பலரும் கலந்து கொண்டனர். 

இப்பாடசாலையின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக NFGG மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விளக்கிக்கூறிய பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பெற்றோர்கள் ஒத்துழைத்தால் மாத்திரமே உரிய பெறுபேறுகளை அடைய முடியும் என்பதனையும் வலியுறுத்தினார். இப்பாடசாலையைச் சேர்ந்த ஐந்தாம் தர மாணவரான ALM ஆபித் என்பவர் உயரம் பாய்தல் போட்டியில் கோட்டமட்டத்தில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமைக்கான பாராட்டும் சான்றிதழும் இந்நிகழ்வின் போதுவழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.














Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.