(ஜுனைட்.எம்.பஹ்த்)
காத்தான்குடி பிரதேச விளையாட்டு துறையினை மேம்படுத்த மோற்கொள்ள வேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் செவ்வாய்க்கிழமையன்று
(29.03.2016) காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச
செயலாளர் அப்கர் அஹமத் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் விசேட அதிதியாக
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும்,
விளையாட்டு துறை அபிவிருத்தி உத்தியோகத்தர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்
றம்ழான் உட்பட காத்தான்குடி பிரதேச விளையாட்டு கழக உறுப்பினர்கள் பலரும்
கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் விசேட உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி பிரதேசத்தில் அன்-நாசர் மைதானம், பொது மைதானம், தாருஸ்ஸலாம் மைதானம், விக்டரி மைதானம் ஆகிய பிரதான மைதானங்கள் மிகவும் சேதமடைந்து விளையாடுவதற்கு தகுதியற்றதாக காணப்படுகிறது, எனவே மைதானங்கள்
அனைத்தும் புனரமைப்பு செய்யப்பட்டு சீர்செய்யப்பட வேண்டும் என்று
விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் கௌரவ HMM.ஹரீஸ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
எமது பிரதேசத்தில் மிகவும் திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களின் தனிப்பட்ட திறமையை வலுப்படுத்தவும்,
வெளிப்படுத்தவும் சிறந்ததோர் ஆடுகளமும், சூழலும் வேண்டும், எனவே நாம்
அவர்களுக்கான வழியினை நாம ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அவ்வாறு நாம் சீர்செய்து, வழிசமைத்து கொடுக்கும் பட்சத்தில் திறமையான விளையாட்டு வீரர்களை
உருவாக்க முடியும் அத்துடன் இலை மரை காயாக இருக்கும் இன்னும் பல வீரர்களை நாம்
வெளிச்சத்துக்கு கொண்டு வரமுடியும். இதனூடாக நமது திறமை வாய்ந்த வீரர்களை
பிரதேச மட்டத்தில் இருந்து மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பங்குபெற
செய்து நமது பிரதேசத்திற்கு நட்பெயரையும் , கௌரவத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும் வெகு விரைவில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் கௌரவ HMM.ஹரீஸ் அவர்களை
காத்தான்குடிக்கு அழைத்து எமது விளையாட்டு மைதானங்களின் நிலைகளை காண்பிக்கவுள்ளோம், அத்துடன் இங்குள்ள அனைத்து விளையாட்டு கழகங்களையும்
ஒன்றிணைத்து கௌரவ அமைச்சருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு விளையாட்டு வீரர்களின் நிலைமைகளையும் அவர்களை வலுப்படுத்தவும்,
விளையாட்டுதுறை அமைச்சினால் நடாத்தப்படுகின்ற விளையாட்டுக்களில் எமது
வீரர்களை பங்கேற்பு செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்நிகழ்வில் ஆராயப்பட்டது .
