(ஜுனைட்.எம்.பஹ்த்)
பலாங்கொடை ஜீலானி பள்ளியை அகற்ற வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு தெரிவித்திருப்பதை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளதுடன் கடந்த ஜனாதிபதி மஹிந்த ஆட்சியில் இவ்வாறு சிங்கள ராவய பேசும் போதெல்லாம் அவர்கள் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாலேயே இவ்வாறெல்லாம் துணிச்சலாக பேசுகிறார்கள் என குற்றம் சாட்டிய ஆசாத் சாலி, முஜிபுர்ரஹ்மான் போன்றோர் இப்போது வாயடைத்துப் போயுள்ளமை ஏன் எனவும் உலமா கட்சி கேட்டுள்ளது.
இதே விடயங்களுக்கு அன்றைய ஆட்சியாளரான மஹிந்தவே பொறுப்பக்கூற வேண்டும் என முழு முஸ்லிம் சமூகமும் கூறியது. அதுதான் நியாயமும் கூட. ஆனால் அதே இனவாத பேச்சுககள் இந்த அரசின் ஆட்சியிலும் பேசப்படும் போது இன்றைய ஆட்சியாளர்களான ஜனாதிபதியும் பிரதமருமே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என முஸ்லிம் சமூகம் உரத்து பேசாமல் வாய் மூடி மௌனமாக இருப்பது சமூகத்தின் நடுநிலை தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பலாங்கொடை ஜீலானி பள்ளிவாயலில் இஸ்லாம் மார்க்கத்துக்கு புறம்பான சில விடயங்கள் நடந்தாலும் அள்ளாஹ்வின் பள்ளிவாயலை அகற்ற ஒரு போதும் இடமளிக்க முடியாது. அத்துடன் இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு சிங்களவர் வருவதற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகின்றனர். முதல் மனிதனும் முதல் முஸ்லிமுமான ஆதம் நடந்து சென்ற இடங்களில் பலாங்கொடையும் ஒன்றாகும்.
ஆதலால் அது முஸ்லிம்களின் புனிதப் பிரதேசமாகும்.
அத்துடன் மேற்படி பள்ளிவாயல் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சித்தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச விருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும். ஆனாலும் கடந்த ஆட்சியில் மஹியங்கன பள்ளி சம்பந்தமான பேச்சு வார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டது போல் ஆகாமல் இருக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திக்க வேண்டும் எனவும் உலமா கட்சி சார்பாக அதன் தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார்.

