அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் "அங்கத்துவ வாரம்" பிரகடனம்; வட்டார மட்டத்தில் கிளைகள்!

Written By avathani Media Network on Saturday, March 12, 2016

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நாடு பூராகவும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக நாளை 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அங்கத்துவ வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கட்சித் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்தல், வட்டார மட்டத்தில் கிளைகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பிரதேச மற்றும் மாவட்ட மத்திய குழுக்களும் தெரிவு செய்யப்படவுள்ளன என்று அறிவிக்கப்படுகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சிப் புனரமைப்பு, இளைஞர் மற்றும் கல்வி விவகாரம் என்பவற்றுக்கு பொறுப்பாளரான கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் மேற்பார்வையின் கீழ் தொகுதி மற்றும் பிரதேச அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் இந்த அங்கத்துவ வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீத், கல்முனைத் தொகுதியில் முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், சம்மாந்துறை தொகுதியில் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் அங்கத்துவ வார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

அங்கத்துவ வார நிகழ்வுகளின் இறுதியாக பிரதேச மற்றும் மாவட்ட மத்திய குழுக்களுக்கான நிர்வாகிகள் தெரிவு கட்சித் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முன்னிலையில் இடம்பெறவுள்ளன.

அதேவேளை கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான பிரதான ஒருங்கிணைப்பு காரியாலயமாக சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் அமைந்துள்ள கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் அலுவலகம் செயற்படும் எனவும் பிரதேச அமைப்பாளர்கள் அனைவரும் அந்த மாவட்ட ஒருங்கிணைப்பு காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு அங்கத்துவ வாரம் மற்றும் கட்சிப் புனரமைப்பு தொடர்பான மேலதிக விபரங்களையும் தேவையான ஆலோசனைகளையும் பெற்றுக்ள்ள முடியும் என அறிவிக்கப்படுகிறது. 

எதிர்காலங்களில் தொழில்வாய்ப்பு மற்றும் உதவித் திட்டங்கள் வழங்கும் நடவடிக்கைகள் யாவும் கட்சியின் பிரதேச மத்திய குழு மற்றும் வட்டாரக் கிளைக் குழுக்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Aslam S.Moulana



Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.