தேசிய படைவீரர்களுக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாது ! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன

Written By avathani Media Network on Thursday, March 24, 2016

(இக்பால் அலி)

இந்நாட்களில் தங்களுடைய அரசியல் காய் நகர்த்தலைச் செய்வதற்காக இணுவ வீரர்களை பயன்படுத்துகின்றார்கள். இராணுவ வீரர்களையும் பௌத்த சமயத் தேரர்களை சிறையில் அடைக்கப்படுகின்றார்கள் எனக் கதைக்கின்றார்கள். ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ, எனக்கோ எமது தாய் நாட்டுக்காக போராடிய இராணுவ வீரர்களை சிறையில் அடைப்பது என்பது எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. தேசிய படைவீரர்களுக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு ,மற்றும் இராணுவ சேவை அதிகார சபையின் வேலைத் திட்டத்தின் அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு விருசர சிறப்புரிமை அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் இன்று 23-03-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

நாங்கள் ஜனாதிபதி தேர்தலின் போது இந்த நாட்டு மக்களிடம் வாக்குறுதியினை வழங்கியிருந்தோம். அரசாங்கம் என்ற வகையில் நீதி, தர்மம் காக்கப்படும் என்று கூறியிருந்தோம்;. கடந்த காலங்களில் இந்த நாட்டில் நிதி இருக்கவில்லை என நாங்கள் அறிவோம். அரசியல் பலம் உள்ளவர்கள் சாதாரண மக்களையெல்லாம் அடக்குமுறைக்கு உட்படுத்திருந்தார்கள். 

அந்த வகையில் இதனை மாற்றி அமைக்கத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் அரசாங்கப் பொறுப்பை ஏற்றவுடன் எவருக்கேனும் சரி நீதி ஒன்றுதான். நாம் அனைவரும் நீதிக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். இந்த நாட்டிலுள்ள அனைவரும் நீதிக்கு கட்டுப்பட்டுத்தான் வேலை செய்ய வேண்டும். நீதி தவறி நாங்கள் எவரும் வேலை செய்ய முடியாது. கடந்த காலத்தில் இந்த நிலை இருக்கவில்லை. அவ்வாறு நீதிக்கு புறம்பாக நடந்து இருப்போமாயின் அதற்குரிய சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும். அது அரசியல்வாதியாக இருந்தால் என்ன ? இராணுவ வீரர்களாக இருந்தால் என்ன ? சமயத் தலைவர்களாக இருந்தால் என்ன அல்லது சாதாரண பொது மகனாக இருந்தால் என்ன ? சட்ட ஒழுங்குகளுக்கு கட்டுப்படுதல் வேண்டும். இவ்வiகாயன சமுகக் கட்டமைப்பை உருவாக்கத்தான் நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கி விட்டு வந்தோம்.

எங்களுடைய இராணுவ வீரர்களையோ சமயத் தலைவர்களையோ சிறையில் பிடித்து வைப்பதற்கு எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்நாட்களில் வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு அகப்பட்டு செயற்படுகின்றார்கள் எனத் எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கின்றார்கள். நாங்கள் எந்த சூழ்ச்சிகளுக்கும் அகப்படவுமில்லை வெளிநாட்டவர்களின் சொல்லுக்கு ஆடவும் இல்லை என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். வெளிநாட்டவர்கள் சொல்லுக்கு ஆடுவதற்கு நாங்கள் தயாரும் இல்லை. ஐக்கிய இலங்கையை பாதுகாத்துக் கொண்டு எமது இராணுவ வீரர்களையும் பாதுகாத்துக் கொண்டு அதேவேளை வெளிநாட்டவர்களுடன் தேவையான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இந்நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளையே நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். 

சர்வதேச நாடுகளுடைய உறவுகள் இல்லாமல் தனிமையுடன் நாட்டை கட்டி எழுப்ப முடியாது. இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கு சகல நாடுகளுடனும் எமது உறவுகளை வைத்துக் கொள்ளுதல் வேண்டும். அந்த வகையில் தான் எமது ஜனாதிபதி பிரதமர் சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் ஐரோப்பிய நாடுகள். யப்பான் ஆகிய நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு எமது நாட்டுக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் செயற்பட்டு வருகின்றார்கள். இதற்கான செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

எமது இராணுவ வீரர்கள் தாய் நாட்டிற்காக செய்த தியாகத்தை நாங்கள் என்றுமே மறக்க முடியாது. அவர்கள் எமக்கு செய்த சேவையை எமது நாடோ இந்த நாட்டு மக்களே மறக்க முடியாது. ஐக்கிய இலங்கையை பலமிக்க பாதுகாப்புடன் கட்டி எழுப்புதற்கு நாங்கள் தேவையான முயற்சி முன்னெடுப்புக்களை மேற் கொண்டு வருகின்றோம் 

கடந்த வருடம் தான் விருசர சிறப்புரிமை அடையாள அட்டை வழங்குவதற்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இடையில் தேர்தல் காலம் வந்தமையால் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. ஆனால் இவ்வருடம் ஜனாதிபதி தலைமையில் ஜனவரி முதல் இவ்வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு எமது இராணுவ வீரர்களுக்கு சிறந்த பயன்களை பெற்றுக் கொள்ளும் முன்னெடுக்கப்பட்டு வருவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். 

வேலைத் திட்டத்தைத் தயாரிக்கலாம் . ஆனால் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு கடின உழைப்புத் தேவையாகும். இராணுவ சேவை அதிகாரச சபையின் தவிசாளர் அனோமா பொன்சேகா மற்றும் இராணுவ அதிகாரிகளின் அயராத முயற்சியினால் இந்தச் சேவை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. 

உண்மையிலே இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான காரணம் கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தியாகத்துடன் உயிர்களை இழந்த காயமுற்ற இராணுவ வீரர்களை கௌரவிக்க வேண்டும் அவர்களுக்கு சேவை புரிதல் வேண்டும் என்பதெல்லாம் எம்முடைய கடப்பாடாகும். இது எங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக இந்த சிறப்புரிமை அடையாள அட்டை வழங்குவதற்கு முன்வரவில்லை. இது எங்களுடைய கட்டாயக் கடமைப்பாடாகும் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் இராணுவ சேவை அதிகார சபையின் தவிசாளர் அனோமா பொன்சேகா , இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.








Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.