முஸ்லிம்களுக்கான தீர்வு முஸ்லிம் மாகாணமல்ல! அல்ஹாஜ் யு.கே நாபிர்

Written By avathani Media Network on Wednesday, March 23, 2016





இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வு குறித்து நமது நாட்டு அரசியல் களம் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கின்றது. இதில் முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன என்பதில் நம் மத்தியில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் தொட்டு சிவில் சமூகம் வரை பல்வேறு முன்வைப்புக்களை முன்வைத்துக்கொண்டிருக்கின்றது. உண்மையில் கிழக்கு மாகாணம் இன்று இருப்பது போல் இருப்பதுவே முஸ்லிம்களுக்கான தீர்வாகும் என நாபிர் பௌண்டேசனின் தலைவரும் அரசியல் செயற்பாட்டாளருமான அல்ஹாஜ் யு.கே நாபிர் தெரிவித்தார்.


ஊடகங்களுக்கு விடுத்துள்ள அவரது அறிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார். 
தொடர்ந்து அவ் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

முஸ்லிம் மாகாணம் முஸ்லிம்களுக்கான தீர்வாக முன்வைக்கப்படுகின்ற போது அது பல்வேறு இன முரண்பாடுகளையும் நடைமுறை சிக்கல்களையும் ஏற்படுத்தும். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சிங்கள முஸ்லிம் பிணக்குகளை அதிகரிக்கவும் நிரந்தரப்படுத்தவும் வழிவகுக்கும்.

அம்பாறை மாவட்ட வேளாண்மை காணிகளுக்கு நீரை தருகின்ற இங்கினியாக்காலை ஆற்றிலிருந்து முஸ்லிம் பிரதேசங்களை நோக்கி வேளாண்மைக்கு தேவையான போது நீரை திறந்து தருவதில் முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தக்கூடும். மற்றும் மின்சார விநியோகத்தில் வேண்டுமென்ற தடைகளை ஏற்படுத்தி எமது தொழிற்சாலைகளை முடக்கி விடுவதற்கான முஸ்தீபுகள் நடைபெறக்கூடும்.

அதுமாத்திரமன்றி மின்சார தடையென்பது நமது அன்றாட வாழ்விலும் பல்வேறுபட்ட இடையூறுகளை தோற்றுவிக்கும். நமது பள்ளிவாசல்கள், பாடசாலைகள், நமது வீட்டுத்தேவைகளென சங்கடங்கள் பல ஏற்படுத்தப்படும். இப்படியான அசௌகரியங்களை நாங்கள் சந்திக்காமல் இருப்பதென்றால் அதற்கு ஒரே வழி முஸ்லிம் மாகாணம் கோருவதிலிருந்து நாம் விலகியிருப்பதுதான்.

இன்று இருக்கும் கிழக்கு மாகாணம் அப்படியே இருப்பதன் மூலம் நமது சமூகத்திலிருந்து ஒரு முதலமைச்சரை தோற்றுவிக்க முடியும். இப்போதைய குடிசன மக்கள் தொகையின்படி கிழக்கு மாகாணத்தில் 42வீதமானவர்கள் முஸ்லிம்களாவர். சிங்களவர்கள் 20 வீதமாவர். தமிழர்கள் 38 வீதமாவார்கள். ஆகையினால் முஸ்லிம்கள் சிங்களவர்களோடு இணைந்து அல்லது தமிழர்களோடு இணைந்து காணப்படும் இணக்கத்தின் அடிப்படையில் கிழக்கின் முதல்வராக ஒரு முஸ்லிம் நபர் வருவதை இலகுவாக அடைந்து கொள்ள முடியும்.

ஒரு பிரச்சினைக்காக தீர்வு என்று காண்கின்ற பொழுது பெறப்படுகின்ற தீர்வு என்பது இன்னொரு பிணக்கை தோற்றுவிப்பதாக உருவாக்கப்படக் கூடாது. அவ்வாறு இல்லாது அமையும் போதுதான் அது தீர்வாக அன்றி நிரந்தர பிரச்சினையாகவே நம்மத்தியில் இருந்துவிடும்.

ஆகவே இன்றைய இனப்பிரச்சினையில் முஸ்லிம்களுக்கான சரியான தீர்வு இன்றைய கிழக்கு மாகாணம் வேறு எந்த மாகாணத்தோடும் இணைக்கப்படாது தனித்து இயங்குவதே தீர்வாகும். என அவ்வறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகின்றது




Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.