தகவல் தர மறுத்தால் இரு வருட சிறை: ரூ.50,000 அபராதம்

Written By avathani Media Network on Saturday, March 26, 2016

தகவல் அறியும் உரிமைச்சட்ட மூலம் ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் ஊடகத்துறை பாராளுமன்ற விவகார அமைச்சருமான கயந்த கருணாதிலகவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.


பிரதமரின் பிறந்த நாளில் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், சிவில் அமைப்புகள், ஊடக அமைப்புகளுக்கு வழங்கிய அரசாங்கத்தின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாக இத் தகவல் அறியும் சட்ட மூலத்தை சமர்ப்பிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சிக்கு இந்த சட்டம் மிக அவசியமான ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தகவலைப் பெற இருக்கும் உரிமைக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினை தாபிக்கவும் தகவலை பெறுவதற்கான நடவடிக்கைகளை வழங்கவும் அதனுடன் தொடர்புள்ள விடயங்களை மேற்கொள்ளவும் இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், பிரஜை ஒருவருக்கு ஏதும் நிறுவனத்தின் உடமை அல்லது அதன் கட்டுப்பாட்டிலுள்ள தகவலைப் பெற உரிமை வழங்கப்படுகிறது.ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள்,அரசின் பாதுகாப்பு மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு, தேசிய நலன் தொடர்பான தகவல்கள், நாட்டின் சர்வதேச உறவுகளுடன் தொடர்புள்ள தகவல்கள்,வரி விதிப்புகள், ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர்வதை தடுக்கும் தகவல்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான தகவல்கள், பரீட்சை திணைக்கள அல்லது,உயர்கல்வி நிறுவன பரீட்சைகளுக்கு இடையூறான தகவல்கள் என்பன வழங்குவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

தகவல்கள் கோரினால் அதனை வழங்குவதை மறுக்க முடியாது எனவும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் பெற விண்ணப்பமொன்றை நிரப்ப வேண்டும் என்பதோடு ஆணைக்குழு முடிவு செய்யும் கட்டணமொன்றையும் செலுத்த வேண்டும்.

தகவல் அறியும் சட்டத்தை செயற்படுத்த ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட இருப்பதோடு அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைபடி ஜனாதிபதியினால் 5 பேர் இதற்கு நியமிக்கப்பட உள்ளனர். சட்டத்தரணிகள் சங்கம் ஒருவரையும் ஊடக அமைப்புகள் ஆசிரியர்கள் இணைந்து ஒருவரையும் சிவில் அமைப்புகள் ஒருவரையும் பரிந்துரைக்க அவகாசம் வழங்கப்படும்.அரசியல் கட்சி சாராத பாராளுமன்ற உறுப்பினராகவோ மாகாணசபை உள்ளூராட்சி சபை உறுப்பினராகவோ அல்லாத ஒருவரோ இதற்கு நியமிக்கப்பட முடியாது. ஆணைக்குழு 5 வருட காலத்திற்கு நியமிக்கப்படும்.

தகவல் வழங்க மறுத்தால் அதற்கு எதிராக முறையிட முடியும் என்பதோடு ஒழுக்காற்று அதிகார சபை விசாரணை நடத்தும். பின்னர் நீதவான் விசாரணையின் பின்னர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டால்,50 ஆயிரம் ரூபாவுக்கு குறையாத அபராதமோ 2 வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையோ அல்லது இரு தண்டனைகளுமோ விதிக்கப்படும்.

ஷம்ஸ் பாஹிம் 


Share this article :
 
Copyright© Avathani Srilanka News web site - All Rights Reserved.