கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண்ணொருவர் இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 1.30 மணிக்கும் 2.30 மணிக்குமிடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
குளோரி வீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்ஷனா (வயது 33) என்ற தாய் ஒருவரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
வழமை போன்று இன்று காரியாலயத்துக்கு சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது. அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடன் கடமையிலிருந்த மற்றொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல் உணவுக்காக வெளியில் சென்று மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது இந்த உதவி முகாமையாளர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

