(NFGG ஊடகப் பிரிவு)
'நாகரீகங்களின் எழுச்சியில் நல்லாட்சியின் பங்கு' எனும் தொனிப்பொருளில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மஹ்தீர் முஹம்மட் அவர்களின் தலைமையில் சூடானின் தலைநகர் கார்ட்டூமில் சர்வதேச மாநாடு கடந்த 2016 நவம்பர் 17-19 ஆம் திகதிகளில் நடை பெற்றது.
பல்வேறு முஸ்லிம் நாடுகளிலிருந்தும் இஸ்லாமிய அறிஞர்கள், கட்சிகளின் தலைவர்கள், மற்றும் அரசியற் செயற்பாட்டாளர்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
'நல்லாட்சி தொடர்பான கோட்பாடுகளும் நடைமுறைகளும், அவற்றை செயற்படுத்துவதில் ஏற்படும் சவால்கள், வரலாற்றில் நல்லாட்சி முறைகள் மனித சமூகத்திறகு வழங்கிய நன்மைகள் நவீன ஜனநாயக அரசியல் கட்டமைப்புக்களில் நல்லாட்சியின் செயற்பாடுகள் என பல்வேறு தலைப்புக்களில் 14 ஆய்வுக் கட்டுரைகள் துறை சார் அறிஞர்களால் முன்வைக்கப்பட்டதுடன் அவை தொடர்பான விரிவான கலந்துரையாடல்களும் இடம் பெற்றன.
NFGG யின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் அவர்கள் 'இலங்கை சூழலில் நல்லாட்சி நடை முறைகள் NFGG யின் அனுபவங்கள்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்ட இலங்கையில் நல்லாட்சி செயற்பாடுகள் குறித்த NFGG யின் அனுபவங்கள் இம்மாநாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் NFGG யின் அரசியல் முன்னெடுப்புக்கள் பலரது பாராட்டையும் பெற்றன.
முஸ்லிம் நாடுகளில் நல்லாட்சி கோட்பாடுகளின் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றுள்ள அனுபவங்களாக துருக்கி மற்றும் மலேசியா பற்றிய அனுபவங்களும் கலந்துரையாடப்பட்டன. NFGG சார்பாக அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர் சகோதரர் AW சப்ரி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலிருந்து NFGG மாத்திரமே இம்மாநாட்டில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
