(Mohamed Nizous)
எழுபதுகளில் பிறந்தவர்க்கு
இருக்கின்ற அனுபவத்தை
எழுத முனைகின்றேன்
எளிதிலே மறக்க ஏலா.
எழுபத்தி எட்டிலே
எழுந்த பெருங்காற்றை
அழுது பயத்துடனே
அப்போது பார்த்து நின்றோம்
எண்பதுகளின் இறுதியிலே
ஈழப் போர் எனும் பெயரில்
Gun முனையில் பள்ளியிலே
கரைந்த உயிரை கண்டழுதோம்
ஆட்டிலறி அதிரடிக்க
ஆகாய ஹெலி அடிக்க
வாட்டிய யுத்த நிலை
வாலிப தொண்ணூறில்.
இரண்டு நூற்றாண்டில்
இளைஞராக வாழ்ந்திருந்தோம்
புரண்ட பக்கமெல்லாம்
புதுப் புது அனுபவங்கள்
இரண்டாயிரத்து நான்கிலே
எழுந்த சுனாமியிலே
மிரண்டு போய் நின்றோம்
மெல்ல உலகம் அழியுமென்றோம்
கடந்த மேயிலே
காட்டாறு வெள்ளம் பாய
நடந்த சோகத்தில்
நாடே கலங்கியது.
சூப்பர் மூன் என்னும்
சுந்தரப் பெரு நிலவில்
சாப்பிடும் அனுபவமும்
சரித்திர அனுபவமே.
இந்த அனுபவங்கள்
எங்கோ படித்ததல்ல
சொந்த வாழ்க்கையிலே
வந்த அனுபவங்கள்...!

